முரசொலி பவள விழா: எமர்ஜென்சி தொடர்பாக ஸ்டாலினை குறிப்பிடாமல் பேசிய வைகோ- திகுதிகு திமுக
முரசொலி பவள விழாவில் எமர்ஜென்சி தொடர்பாக பேசிய வைகோ ஸ்டாலினை பற்றி எதுவுமே குறிப்பிடாதது திமுகவினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
Recommended Video
சென்னை: முரசொலி பவள விழாவில் பேசிய வைகோ எமர்ஜென்சி காலத்தில் நடைபெற்ற சம்பவங்களின் போது ஸ்டாலின் பெயரை திட்டமிட்டே இருட்டடிப்பு செய்து பேசியிருப்பதாக பொங்குகிறது திமுக வட்டாரங்கள்.
சென்னை கொட்டிவாக்கத்தில் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோவும் பங்கேற்றார்.
திமுக மேடையில் 11 ஆண்டுக்கு பின்னர் நேற்று வைகோ பேசுகிறார் என்பது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் திமுக தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் வட்டாரங்களே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தன.
வைகோவை வரவேற்ற ஸ்டாலின்
அனைத்து தலைவர்களும் மேடைக்கு வந்த பின்னர் வைகோ வந்தார். அப்போது ஸ்டாலின் எழுந்து போய் நின்று வைகோவை வரவேற்றார். அப்போது தொண்டர்கள் உற்சாகமாக கைதட்டினர்.
வைகோ நெகிழ்ச்சி
பின்னர் வைகோ வழக்கமான தமது சிம்மக் குரலில் கர்ஜிக்கத் தொடங்கினார். கருணாநிதிக்கும் தமக்குமான உறவுகளை மிகவும் உணர்வுப்பூர்வமாக நெகிழ்ச்சியோடு அடுக்கிக் கொண்டே வந்தார்.
மு.க. அழகிரி
எமர்ஜென்சி காலத்தில் கருணாநிதி மற்றும் முரசொலியின் செயல்பாடுகளை விவரித்தார் வைகோ. அப்போது யாரும் எதிர்பாராத வகையில், சென்னை அண்ணா சாலையில் கருணாநிதி எமர்ஜென்சிக்கு எதிராக துண்டு பிரசாரம் கொடுக்க மு.க. அழகிரி உதவினார் என இருமுறை அவரது பெயரை உச்சரித்தார்.
எமர்ஜென்சியில் சிட்டிபாபு மரணம்
இதையடுத்து எமர்ஜென்சி காலத்தில் சிறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த சிட்டிபாபு குறித்து வைகோ பேசினார். சிட்டி பாபு மரணம் தொடர்பாக முரசொலி மாறன் தமக்கு கடிதம் எழுதியதையும் முரசொலியில் கருணாநிதி எழுதியதையும் விவரித்தார் வைகோ. இதையடுத்து தற்போதைய அரசியலுக்கு அவர் தாவினார்.
ஸ்டாலினை காப்பாற்றிய சிட்டிபாபு
இது திமுக மூத்த நிர்வாகிகளை கடும் அதிர்ச்சியடைய வைத்தது. ஏனெனில் எமர்ஜென்சி காலத்தில் முன்னாள் சென்னை மேயர் சிட்டிபாபு உயிரிழந்ததற்கு காரணமே அவர் மு.க.ஸ்டாலின் மீது விழுந்த அடிகளைத் தாங்கியதுதான். எமர்ஜென்சி காலத்தில் சென்னை மத்திய சிறையில் மு.க.ஸ்டாலின் அடைக்கப்பட்டிருந்தார். அவர் குண்டாந்தடிகளால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
திமுக வரலாறு
அவர் மீது தாக்குதல்கள் விழாத வகையில் சிட்டிபாபுதான் அத்தனை அடிகளையும் தாங்கினார். அதனாலேயே அவர் மாண்டு போனார் என்பது வரலாறு. இது திமுகவை படித்த அனைவருக்குமே தெரிந்த ஒன்று. திமுகவினரும் நன்கு அறிந்த வரலாறுதான். சிட்டிபாபு வரை பேசிய வைகோ ஸ்டாலினைப் பற்றி குறிப்பிடாமல் போனது நிச்சயமாக திட்டமிட்ட இருட்டடிப்புதான் என்கின்றனர் திமுக தலைவர்கள்.
திமுக தலைவர்கள் அதிருப்தி
இது தொடர்பாக திமுக தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் நாம் பேசிய போது, வைகோவின் இந்த இருட்டடிப்பை நாங்கள் அனைவரும் உன்னிப்பாகவே கவனித்தோம். அவர் வேண்டுமென்றே மு.க. அழகிரி பெயரை உச்சரித்ததும் ஸ்டாலினுக்காகத்தான் சிட்டிபாபு தியாகம் செய்தார் என்பதை மறைத்ததும் நாங்கள் நன்கு அறிவோம் என்றார். இதனால் வைகோ பேசி முடிந்த உடன் முன்வரிசையில் அமர்ந்திருந்த திமுக நிர்வாகிகள் யாரும் கைதட்டாமல் அதிருப்தியுடன் இருந்தனர். வைகோ மேடைக்கு வந்தபோதும் அவர் பேச தொடங்கியதும் விண்ணதிர கைதட்டிய திமுக தொண்டர்களை வைகோவின் இந்த பேச்சு ஏமாற்றிவிட்டது என்கின்றனர்.