உதயநிதியை ஓரம் கட்டி வைங்க.. அதுதான் திமுகவுக்கு நல்லது!
Recommended Video
சென்னை: திமுக தலைமைக்கு சுளீரென ஒரு சூடு கொடுத்துள்ளார் உண்மையான திமுக தொண்டர் ஒருவர். ஒருவர்தானே என்று அலட்சியமாக இதை திமுக தலைமை எடுத்துக் கொள்ளாமல் சுதாரித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
உங்களுக்கு அறுவறுப்பாக இல்லையா என்று உதயநிதியிடம் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் என்றால் இதை தனி மனித குமுறலாக எடுத்துக் கொள்ள முடியாது. திமுகவின் அடிமட்ட அளவில் பலரும் இந்தக் குமுறலுடன்தான் உள்ளனர். அதாவது உண்மையான தொண்டர்கள் மற்றும் தலைவர்கள்.
திமுகவில் உதயநிதிக்கு கொடுக்கப்பட்டு வரும் தேவையில்லாத முக்கியத்துவம், மரியாதை, கெளரவம் என எதற்குமே அவருக்கு தகுதி இல்லை என்பதை உண்மையான திமுக தொண்டர்கள் குமுறிக்கொண்டுதான் உள்ளனர். தலைமமைதான் கண்டு கொள்ளாமல் உள்ளது. இன்று ஒருவர் பகிரங்கமாக குமுறி விட்டார்.
டிஆர் பாலுவுக்கு எங்க போச்சு புத்தி
தஞ்சை தெற்கு மாவட்ட திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில்தான் இந்தக் கூத்து. அந்தக் கூட்டத்தில் இடம் பெற்ற பேனரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைநத் தலைவர் கருணாநிதி படங்களுடன் உதயநிதியின் படத்தையும் போட்டிருந்தனர். டி.ஆர்.பாலு தலைமையில் நடந்த கூட்டம் இது. உதயநிதி திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர்.
எதற்காக இந்த கெளரவம்
கருணாநிதிக்கு உடல் நிலை சரியில்லாத காலத்திலிருந்தே உதயநிதியை மெதுவாக திமுகவில் முக்கியப்படுத்த ஆரம்பித்து விட்டனர். உச்சகட்டமாக மூன்றாம் கலைஞர் என்றெல்லாம் கூப்பிட ஆரம்பித்து விட்டனர். இதை உண்மையான, நீண்ட கால திமுக தலைவர்கள், தொண்டர்கள், கருணாநிதி விசுவாசிகள் ரசிக்கவில்லை. முகம் சுளிக்கின்றனர்.
புகைப்படம் தேவையா
இந்த நிலையில்தான் இந்த பேனர் புகைப்படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது. திமுக தொண்டர் ஒருவர் பகிரங்கமாகவே அருவறுப்பா இல்லையா என்று உதயநிதிக்கே டேக் செய்து டிவிட்டரில் கேட்டுள்ளார். இதை எதிர்பாராத உதயநிதி, தவறுதான், இனி நடக்காது என்று பதிலளித்துள்ளார்.
ஏன் இப்படி
திமுக என்பது சாதாரண கட்சி அல்ல. மாபெரும் இயக்கம், அந்த இயக்கத்தின் தொண்டர்கள் தேக்கு மரத்திற்கு நிகரானவர்கள், தன்மானச் சிங்கங்கள், அசைக்க முடியாத கொள்கைக்குச் சொந்தக்காரர்கள், மானமிகு தளபதிகள்.. இதெல்லாம் தற்போது பழைய கதையாகி விட்டதையே உதயநிதிக்கு திமுகவினர் தரும் முக்கியத்துவம், மரியாதை, பணிவு எல்லாம் காட்டுகிறது. திமுகவின் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவரின் படத்தை போட்ட பேனருக்குக் கீழே டி.ஆர். பாலு போன்றவர்கள் உட்காருவதெல்லாம்.. என்னவென்று சொல்வது!
அழகிரி மேலே தப்பே இல்லை
உதயநிதிக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றால் அழகிரியை அவர்கள் தங்கத் தாம்பாளத்தில் வைத்தல்லவா தாங்க வேண்டும். திமுகவின் தென் மாவட்ட அமைப்பை தனது கட்டுக்குள்ளும், தலைமைத்துவத்தின் கீழும் மிக அழகாக வைத்திருந்தவராயிற்றே அவர். அவரை விடவா, உதயநிதி பெட்டர் சாய்ஸ்?? அழகிரி போன்ற அருமையான தளபதிகளை ஒதுக்கி விட்டு உதயநிதியை ஏற்றிக் காட்டுவது பொருத்தமாகவும் இல்லை, நியாயமாகவும் இல்லை, அழகாகவும் இல்லை.
ஸ்டாலினுக்கு நல்லது
உதயநிதியை முற்றாக ஒதுக்கி அவரது இடம் எதுவோ, அந்த இடத்தோடு ஒதுங்கியிருக்குமாறு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்துவது திமுகவுக்கு நல்லது. இதில் யாருடைய அட்வஸையைும் அவர் கேட்கக் கூடாது. ஸ்டாலினுக்கே, எப்போது இடம் தர வேண்டும், எந்த இடம் தர வேண்டும், எப்படித் தர வேண்டும் என்று ஆனானப்பட்ட கருணாநிதியே நிதானித்துதான் செய்தார். அப்படி இருக்கும்போது ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் உதயநிதி என்பது நிச்சயம் சகிக்க முடியாத ஒன்று. திமுகவின் எதிர்காலத்துக்கும் நல்லதில்லை.
செய்தியைப் படித்து விட்டு சுர்ரென்று கோப்படாமல், பொறுமையாக யோசித்துப் பார்த்தால் புரியும்.