அதிமுகவை வேவு பார்த்த விவகாரம்... கருணாநிதியின் விளக்கம் கேட்கிறார் சி.ஆர்.சரஸ்வதி
சென்னை: ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளிக்க வேண்டும் என அதிமுகவின் செய்தி தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி வலியுறுத்தியுள்ளார்.
திமுக ஆட்சி காலத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக அலுவலக தொலைபேசி பேச்சுக்களை ஒட்டுக் கேட்பதற்காக இத்தாலி நிறுவனத்திடம் திமுக உதவி கேட்டதாக விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் இருந்த 2011-ம் ஆண்டுவாக்கில் இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஒட்டு கேட்பு கருவிகளை வாங்க தமிழக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதற்காக இத்தாலி நிறுவன ஊழியர்கள் தமிழகம் வந்ததாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
இதனால், சட்டசபைத் தேர்தலின் போது அதிமுக நடவடிக்கைகளை கண்காணிக்க திமுக ஏற்பாடு செய்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறுகையில், "ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை திமுக மறுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், ‘அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுவதை விக்கிலீக்ஸ் வழக்கமாக கொண்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.