கோவை குட்கா: மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திமுகவினர் கைது
போராட்டம் நடத்தியோர் மீது வழக்கு பதிந்ததை கண்டித்து திமுகவினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.
கோவை: சூலூர் குட்கா ஆலை விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ததைக் கண்டித்து, மாவட்டஎஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலை விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை தேவை என சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. கார்த்திக் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். எனவே, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், அனுமதியின்றி போராட்டம் நடத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் கார்த்திக் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதன்படி 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். எம்.எல்.ஏ.கார்த்திக் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதைக் கண்டித்தும், திமுகவினர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாவட்ட எஸ்.பி.அலுவலகம் முற்றுகையிட போவதாக இன்று காலை தகவல் பரவியது. இதையடுத்து ஏராளமான போலீசார் எஸ்.பி.அலுவலகம் முன் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில், ஏராளமான திமுகவினர் முற்றுகையிட முயன்றனர்.
ஆனால் முன்கூட்டியே அங்கு போலீசார் இருந்ததால், போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் முற்றுகையிட முயன்றவர்கள், சாலையில் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து எஸ்.பி. அலுவலகம் மற்றும் சூலூரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.