சபாநாயகரைக் கண்டித்து சாலை மறியல்- ஸ்டாலின் உட்பட திமுக, காங். எம்.எல்.ஏ.க்கள் கைதாகி விடுதலை
சென்னை : சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகம் எதிரே ராஜாஜி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக எம்எல்ஏக்கள் பணம் வாங்கியதாக எம்எல்ஏ சரவணன் பேசிய வீடியோ குறித்து விவாதிக்க திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். எம்எல்ஏ சரவணன் வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினர்.
தொடர்ந்து பதாகைகளை ஏந்தி திமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதனையடுத்து அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்ட பெரும்பான்மை திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மோசடி செய்தது நியாயம் தானா. தமிழக அரசை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களுடன் திமுகவினர் மறியல் செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் கிழிந்த சட்டையுடன் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது
சிறிது நேரம் நீடித்த இந்த சாலை மறியலைத் தொடர்ந்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ராயபுரம் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் பின்னர் போலீசார் விடுவித்தனர்.