குட்கா விற்பனை.. லஞ்சம் பெற்றவர்களை சிறையில் தள்ளாமல் எங்கள் மீது நடவடிக்கை: ஸ்டாலின் கோபம்
தமிழக சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
சென்னை : தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களான பான்மசாலா, குட்கா உள்ளிட்டவை தாராளமாக கிடைப்பதை ஆதாரத்துடன் காட்டி பேச அனுமதி மறுத்ததால் திமுக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது.
சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
துறை ரீதியில் இருக்கும் பொதுவான பிரச்னைகள் குறித்து சட்டசபையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 நாட்களில் திமுக சார்பில் சென்னையில் வேப்பேரி, தாசப்பிரகாசம் சாலை, ஓட்டேரி, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் கள ஆய்வு செய்தது.
அதில் கடைகளில் தாராளமாக பான்மசாலா, குட்கா கிடைப்பதை புகைப்படங்களுடன் வெளிக்காட்டினோம். ஆனால் இது குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் ஆதாரங்களை காட்டிய நிலையில் லஞ்சம் வாங்கிக் கொண்டு இதனை அனுமதித்த காவல்துறை அதிகாரிகள், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நியாயமாக இந்நேரம் ஜெயிலில் இருக்க வேண்டும்.
ஆனால் இந்தப் பிரச்னை எழுப்பிய எங்கள் மீது குற்றம்சாட்டி உரிமைக்குழுவிற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் கொடுத்த ஆதாரங்களை பெற்றுக் கொண்டு இது எப்படி கிடைத்தது என்று விசாரணை நடத்தாமல் எங்களை முடக்க நினைக்கிறது அரசு. அதனை கண்டித்தே திமுக வெளிநடப்பு செய்துள்ளது. இதனிடையே தடை செய்யப்பட்ட குட்காவை சட்டசபைக்கு எடுத்து வந்ததாக ஸ்டாலின் மீது குற்றம்சாட்டப்பட்டு உரிமைக்குழு விசாரணை நடத்த சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.