அனைத்துகட்சிகளின் பங்களிப்பை அதிமுக அறுவடை செய்கிறது : திமுக குற்றச்சாட்டு
சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கிடைத்த வெற்றி 5 மாவட்ட மக்களை சேரும். அனைத்து கட்சிகளின் பங்களிப்பையும் அ.தி.மு.க. அறுவடை செய்ய முயற்சிக்கிறது துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
முல்லை பெரியாறு விவகாரத்தில் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தபோது இதனை தெரிவித்தார். இன்று காலை சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா விதி எண் 110-ன் கீழ், 'முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தமிழக மக்களுக்கு வழங்கப்பட்ட நீதி' என்றொரு அறிக்கை வாசித்தார்.
அதில், திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்து பேசியிருந்தார். முதல்வர் அறிக்கையை வாசித்து முடித்தவுடன் திமுக உறுப்பினர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
பேரவையில் அது தொடர்பாக பேச அனுமதி கோரினர். ஆனால், சபாநாயகர் தனபால், அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். விதி எண் 110-கீழ் வாசிக்கப்பட்ட அறிக்கை மீது விவாதம் நடத்த முடியாது என கூறினார்.
இதனையடுத்து திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக உறுப்பினர் துரைமுருகன்: முல்லை பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததே தி.மு.க. தலைவர் கருணாநிதிதான் என்று தெரிவித்தார்.
மேலும், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கிடைத்த வெற்றி 5 மாவட்ட மக்களை சேரும். அனைத்து கட்சிகளின் பங்களிப்பையும் அ.தி.மு.க. அறுவடை செய்ய முயற்சிக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.