சிவாஜி சிலையை என்ன செய்யப்போகிறார்கள்? கேட்கிறார் ஸ்டாலின்
சென்னை: கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை குறித்து அரசு தனது முடிவை அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டசபையில் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டசபைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது, என்.எல்.சி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசவும் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்.எல்.சி ஊழியர் பிரச்சனையில் இன்னும் தீர்வு காணப்படவில்லை என்ற அவர், பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதிக்கவும் சபாநாயகர் அனுமதி தரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை குறித்து அரசு தனது முடிவை அறிவித்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார்.
இதனிடையே தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க உறுப்பினர்கள் இன்று 2 வது முறையாக வெளிநடப்பு செய்தனர். தொழில்துறை மானியக் கோரிக்கை மீது தி.மு.க உறுப்பினர் ராமச்சந்திரன் பேசினார். தி.மு.க ஆட்சியில் தொழில்கள் தொடங்குவது மிக எளிமையாக இருந்தது என்று ராமச்சந்திரன் கூறினார். முதலீட்டாளர்கள் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்தது என ராமச்சந்திரன் பேசினார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் இரண்டாவது முறையாக வெளிநடப்பு செய்தனர்.
மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து விவாதிக்க சட்டசபையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சியினர் சபாநாயகரிடம் நேற்று கடிதம் கொடுத்து இருந்தனர். இதன் மீது சட்டசபையில் இன்று விவாதிக்க எதிர்க்கட்சியினர் முயன்றனர். அப்போது சபாநாயகர் நீங்கள் கொடுத்த கடிதத்துக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் சொல்லும் கருத்துக்களை மானியக் கோரிக்கையில் பேசுங்கள். தனியாக விவாதிக்க முடியாது. அதற்கு நேரம் இல்லை என்றார். இதனால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி உறுப்பினர்கள் சபையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.