யோகேந்திர யாதவ் கைதுக்கு திமுக கண்டனம்.. அரசு தக்க விலை கொடுக்க வேண்டியிருக்கும்.. ஸ்டாலின் சீற்றம்
திருவண்ணாமலை: யோகேந்திர யாதவ் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக அரசு தக்க விலை கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.
சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளைச் சந்தித்து கலந்துரையாட வந்த ஸ்வராஜ் இந்தியா கட்சி தலைவர் யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை-சேலம் நடுவே அமைக்கப்பட உள்ள ரூ.1000 கோடி மதிப்பிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளை சந்திக்க யோகேந்திர யாதவ் இன்று சென்றார்.
செங்கம் காவல் நிலைய எல்லையில் வைத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருடன் யோகேந்திர யாதவும், தொண்டர்களும் வாக்குவாதம் நடத்தினர். இதை செல்போனில் வீடியோவாக எடுத்த தொண்டர்கள் தள்ளிவிடப்பட்டனர்.
அதுமட்டுமின்றி, யோகேந்திர யாதவை சந்திக்க காத்திருந்த விவசாயிகளையும் கூட போலீசார் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட யோகேந்திர யாதவ், மாலையில் விடுதலை செய்யப்பட்டார். அப்போது விவசாயிகளை சந்திக்க அவர் முயன்றதால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
The DMK strongly condemns the arbitrary detention of @_SwarajIndia chief @_YogendraYadav who supported farmers affected by #ChennaiSalemExpressway project.
— M.K.Stalin (@mkstalin) September 8, 2018
The intolerant AIADMK govt will pay the price for denying people the democratic right to dissent & protest.
இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், "சென்னை-சேலம் சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க சென்ற ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டதற்கு திமுக கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. எதிர்ப்புகள், போராட்டங்கள் போன்ற ஜனநாயக வழிமுறைகளுக்கு அனுமதியளிக்காத சகிப்புத்தன்மையற்ற அதிமுக அரசு இதற்குத் தக்க விலை கொடுக்க வேண்டி வரும்" என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.