ஏப்.3ல் விவசாயிகள் வேலை நிறுத்தப் போராட்டம்.. திமுக ஆதரவு
பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப். 3-ஆம் தேதி விவசாயிகள் சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ள போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது.
சென்னை: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்திருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம், நதி நீர் இணைப்பு, வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் கடந்த 15 நாள்களாக போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை.
இந்நிலையில் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று திமுக ஆதரவு அளிக்கும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு திமுக முழு ஆதரவு அளிக்கும்.
விவசாயிகளின் நலன்களுக்காக திமுக குரல் கொடுத்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க மறுப்பு தெரிவிக்கின்றன. எனவே தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்றார் ஸ்டாலின்.