அதிமுகவுக்கு தாவப் போகும் அனிதா ராதாகிருஷ்ணன், கருப்பசாமி பாண்டியன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்!!
சென்னை: தி.மு.க.வில் இருந்து திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் நெல்லை மாவட்ட முன்னாள் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் இன்று அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். இருவரும் அண்ணா தி.மு.க.வுக்கு தாவ இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் தொகுதியில் 2001ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்.எல்.ஏவாக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். 2001-2006ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும் இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன்.
பின்னர் 2009 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட அண்ணா தி.மு.க.வில் இருந்து வெளியேறி தி.மு.க.வில் ஐக்கியமானார் அனிதா. தி.மு.க.வில் தீவிர அழகிரி விசுவாசியாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளாக ஓரம்கட்டப்பட்டிருந்தார்.
இதனால் மீண்டும் அண்ணா தி.மு.க.வுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் தாவ இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த அனிதா ராதாகிருஷ்ணன், மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். அத்துடன் ஜெயலலிதா போட்டியிடுவதற்காக திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
மேலும் வரும் 23-ந் தேதியன்று திருச்செந்தூரில் நடைபெறும் அண்ணா தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் அக்கட்சியில் இணைய இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதேபோல் அண்ணா தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு தாவியவர்களில் நெல்லை கருப்பசாமி பாண்டியனும் ஒருவர். நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தார் கருப்பசாமி பாண்டியன். லோக்சபா தேர்தலின் போது மகன் சங்கருக்கு சீட் வாங்குவதற்கு பெரும் போராட்டம் நடத்தினார்.
லோக்சபா தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சி8யின் மாவட்டங்கள் 65ஆக பிரிக்கப்பட்டது. அப்போதே தமது கடும் எதிர்ப்பை கருப்பசாமி பாண்டியன் பதிவு செய்தார்.
அதன் பின்னர் பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் செயலாளர்களுக்கான தேர்தலில் மகன் சங்கரை எப்படியும் வெற்றி பெற வைப்பது என கங்கணம் கட்டிக் கொண்டு கருப்பசாமி வேலை பார்த்தார்.. ஆனால் சங்கர் படுதோல்வி அடையத்தான் முடிந்தது.
இதனால் அதிருப்தியில் இருந்த கருப்பசாமி பாண்டியனை சமாதானப்படுத்தும் வகையில் அவருக்கு தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கபட்டது. ஆனாலும் தி.மு.க.வில் இருந்து ஒதுங்கியே இருந்தார் கருப்பசாமி பாண்டியன்.
இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனும் கருப்பசாமி பாண்டியனும் தாய்வீடான அண்ணா தி.மு.க.வுக்கே திரும்ப இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்தே இருவரும் இன்று தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகள் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் அறிவித்துள்ளனர்.
இதனிடையே தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 25-ந் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.