கருப்பசாமி பாண்டியன் மீதான பாலியல் புகார் விவகாரம் - மாலைராஜா திமுகவில் இருந்து சஸ்பென்ட்!
சென்னை: திருநெல்வேலி மாவட்ட திமுக செயலர் கருப்பசாமி பாண்டியன் மீது பாலியல் புகார் கொடுத்த விவகாரத்தில் பின்னணியில் இருந்ததாக அக்கட்சியின் முன்னாள் மாநகர திமுக செயலர் மாலைராஜா சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி திமுக பிரமுகர் நாலடியாரின் மகள் தமிழரசி நெல்லை காவல்துறையில் நேற்று ஒரு புகார் கொடுத்திருந்தார்.
கேர்ள் பிரண்டாக இருக்க வேண்டும்
அந்தப் புகாரில், திமுகவில் பொறுப்பு வாங்கிக் கொடுக்க வேண்டுமெனில் தமக்கு கேர்ள் பிரண்டாக இருக்க வேண்டும் என்று மாவட்ட செயலர் கருப்பசாமி பாண்டியன் வலியுறுத்தியதுடன் குற்றாலத்தில் தம்மிடம் வக்கிரமாகவும் நடந்து கொண்டதாக கூறியிருந்தார்.
கொலை மிரட்டல்
மேலும் கருப்பசாமி பாண்டியன் தரப்பில் இருந்து தமக்கு கொலை மிரட்டல் வழக்கு வருவதாகவும் அந்தப் புகாரில் தமிழரசி கொடுத்திருந்தார்.
கண்டுக்காத திமுக
திமுக தலைமைக்கு தாம் இந்தப் புகாரை 2 வாரத்துக்கு முன்பே அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததாலேயே போலீசில் புகார் கொடுக்கப்படுவதாகவும் தமிழரசி குறிப்பிட்டிருந்தார்.
'க'னா மீது புகார் பதிவு
இந்தப் புகாரைத் தொடர்ந்து கருப்பசாமி பாண்டியன் மீது நெல்லை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் கருப்பசாமி பாண்டியன் தரப்போ, கட்சியில் எதிராக இருக்கும் மாலைராஜாவின் தூண்டுதலின் பேரிலேயே இந்தப் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறியது.
பின்னணியில் மாலைராஜா
இதனிடையே தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கருப்பசாமி பாண்டியன் பெயருக்கு களங்கம் விளைவிக்க துணை போவதால் மாலைராஜா சஸ்பென்ட் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மாலைராஜா சஸ்பென்ட்
அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலியை சேர்ந்த மாலைராஜா, மாநகர தி.மு.க. செயலாளராக செயல்பட்டு வந்த போது, நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தவுடன், மாநகர செயலாளர் பொறுப்பில் இருந்து விலகி, ஒதுங்கியிருந்து விட்டு, தற்போது தி.மு.க. கட்டுப்பாட்டை மீறியும், தி.மு.க.விற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், குறிப்பாக மாவட்ட செயலாளரை தரக்குறைவாகவும், அவரது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும் செய்திகள் வெளிவருவதற்கு துணை போவதாக அறிவதால் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
மு.க. அழகிரி ஆதரவாளர்
தற்போது கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கும் மாலைராஜா மு.க. அழகிரியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.