அறிவாலயத்தில் ஸ்டாலின் ஆதிக்கம் குறைப்பு! திமுக அமைப்புச் செயலர்களாக 'கருணாநிதி ஆதரவாளர்கள்'!!
சென்னை: திமுக தலைமையகமான அறிவாலயத்தில் மு.க. அழகிரி எதிர்பார்த்தது போல மு.க.ஸ்டாலினின் ஆதிக்கம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அமைப்புச் செயலாளர்களாக உள்ள இருவருமே கருணாநிதியின் ஆதரவாளர்கள்.
திமுகவில் இருந்து அழகிரி டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில் மு.க.ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்பது உறுதியான ஒன்றாக இருந்தது. ஆனால் கருணாநிதியோ கனிமொழியோ அழகிரியை மீண்டும் கட்சியில் இணைப்பதுதான் சரி என்கிற வகையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.
இதில் கனிமொழி, வெளிப்படையாக அழகிரியை சந்திப்பதும் ஆலோசிப்பதுமான செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. மேலும் திமுகவில் இருந்து கனிமொழி, ராசா, தயாநிதியை ஓரம்கட்டி வைத்துவிட்டால் தமக்கு எந்த சிக்கலுமே எதிர்காலத்தில் இருக்காது என்பதும் ஸ்டாலினின் கணக்கு.
கலியாணசுந்தரம் ராஜினாமா
இப்படியான மோதலில்தான் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினின் வலதுகரமாக இருந்து செயல்பட்டு வந்த பெ.வீ. கலியாணசுந்தரத்தை ராஜினாமா நெருக்கடிக்கு தள்ளியிருக்கின்றனர் திமுக தலைவர்கள்.
பொதுவிவாதத்துக்கு வழிவகுத்த கோரிக்கை
கலியாணசுந்தரமும் கனிமொழி, தயாநிதி, ராசா ஆகியோரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற திமுகவின் நீண்டகால முனுமுனுப்பை பகிரங்கப்படுத்தி பொது விவாத களத்துக்கு கொண்டுவந்துவிட்டார்.
ஊழலை ஒப்புக் கொள்கிறாரா ஸ்டாலின்?
ஆனால் கலியாணசுந்தரம் மூலம் வீசப்பட்டியிருக்கும் அம்பை கனிமொழி தரப்பு வேறு வகையில் திருப்பி வீசுகிறது.. கனிமொழி உள்ளிட்டோரை இப்போது நீக்க வேண்டும் என்று சொன்னால் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது என்பதை ஸ்டாலின் ஒப்புக் கொள்கிறாரா? என்பதுதான் அந்த எதிர் கேள்வி.
அறிவாலயத்தில் ஸ்டாலின் ஆதிக்கம் குறைப்பு
மேலும் ஸ்டாலின் செக் வைக்க நினைத்தார்.. ஆனால் இப்போது அந்த செக் ஸ்டாலினுக்குத்தான் திருப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகின்றனர். அதாவது ஸ்டாலின் ஆதரவாளர் கலியாணசுந்தரம், அண்ணா அறிவாலயத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர். இப்போது கலியாணசுந்தரம் சஸ்பென்ட் செய்யப்பட்டு ஆர்.எஸ்.பாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.