தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாளை முக்கிய முடிவு: ஸ்டாலின்
திமுக நாளை முக்கிய முடிவை அறிவிக்கப் போவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருவாரூர்: சென்னையில் நாளை கூடும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் திருவாரூரில் இன்று இரவு நடைபெற்றது. இதில் திமுகவின் தோழமை கட்சித் தலைவர்களான வீரமணி, வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன், பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் சிறப்புரையாற்றிய மு.க.ஸ்டாலின், தமிழக சட்டசபையை திமுக புறக்கணித்தது குறித்து விளக்கம் அளித்தார். அத்துடன் மக்கள் விரும்பும் முடிவு ஒன்றை சென்னையில் நாளை நடைபெறும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதித்து அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதற்கான அவசர சட்டம் கோரி திமுக சட்டசபையை புறக்கணித்து வருகிறது, அத்துடன் மாதிரி சட்டசபையையும் திமுக நடத்தி வருகிறது.
இந்த நிலையில் திமுக முக்கிய முடிவு ஒன்றை நாளை அறிவிக்க உள்ளதாக ஸ்டாலின் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.