மதிமுகவை உடைக்க நினைக்கும் திமுகவின் எண்ணம் நிறைவேறாது - ஜி.ராமகிருஷ்ணன்
சென்னை: மதிமுகவை உடைக்க வேண்டும் என்ற திமுகவின் எண்ணம் வெற்றி பெறாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியில், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
தேமுதிகவும் பாஜகவுடன் நீடிப்பதா வேண்டாம் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. அதேபோல் அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த, த.மா.கா.,விலும், மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நல கூட்டணியில் இணைவது குறித்து, அக்கட்சியினரும் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். அதனால் வாசனும் இந்த கூட்டணியில் சேர்வது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை அண்ணாநகர் தொகுதி, தா.பி.சத்திரம் பகுதியில் உள்ள 600 குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், மக்கள் நல கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. இந்த நிலையில் மதிமுகவை உடைக்க நினைக்கும் திமுகவின் எண்ணம் வெற்றி பெறாது எனத் தெரிவித்தார்.