நகராட்சி ஆணையரை மிரட்டிய திமுக மாவட்ட செயலாளர்.. ஆடியோ வெளியானது
நகராட்சி ஆணையரை திமுக மாவட்ட செயலாளர் மிரட்டும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
நெல்லை: நகராட்சி ஆணையரை திமுக மாவட்ட செயலாளர் மிரட்டும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதில் திமுக மாவட்ட செயலாளர் நகராட்சி ஆணையரிடம் பணம் கேட்டு இருக்கிறார்.
நெல்லை மாவட்டத்திற்கு திமுகவின் துணை பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்கான முன்னேற்ப்பாடுகளை திமுகவினர் செய்திருந்தனர்.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திமுகவின் நெல்லை மாவட்ட புறநகர் செயலாளர் சிவபத்மநாபன் என்பவர் மு.க.ஸ்டாலின் வருகையை காரணம் காட்டி பலரிடம் பணம் வசூலித்துள்ளார். அவர் தென்காசி நகராட்சியின் ஆணையராக பணியாற்றும் யோகராஜ் என்பவரை அலைபேசியில் அழைத்துள்ளார்.
அவர் அந்த காலில் ''நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க கூடாது. 50ஆயிரம் ரூபாய் கொடுங்கள்'' என்று கூறியுள்ளார். மேலும் ''ஆணையாளராகிய நீங்கள் ஆற்காட்டாருக்கு வேண்டியவர் என்பதால்தான் 50 ஆயிரம் கேட்பதாகவும், இல்லையென்றால் அதிகம் கேட்போம்'' என்றும் கூறியுள்ளார்.
மேலும் ''உங்களால் முடிந்தால் கொடுங்கள். நீங்கள் எந்த எந்த கட்டிடங்களுக்கு பணம் வாங்கினீர்கள் என்று பட்டியல்கள் என்னிடம் உள்ளது. அதை வெளியிட தயாராக இருக்கிறேன்'' என்றும் அவர் பேசியது வெளியாகியுள்ளது. ஏற்கனவே நெல்லை மாவட்ட திமுகவில் கோஷ்ட்டிபூசல் உருவாகியுள்ள நிலையில் இந்த பரப்பரப்பு ஆடியோ வெளியாகியுள்ளது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.