தூத்துக்குடி கலவரத்திற்கு திமுக தான் காரணம்.. சட்டசபையில் முதல்வர் பேச்சு
தூத்துக்குடியில் அமைதியான போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்திற்கு திமுக தான் காரணம் என்று சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தூத்துக்குடியில் அமைதியான போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்திற்கு திமுக தான் காரணம் என்று சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. காலையில் சட்டசபை தொடங்கியதில் இருந்து ஸ்டெர்லைட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வரை ராஜினாமா செய்ய சொல்லி திமுக வெளிநடப்பு செய்தது. இதையடுத்து பேசிய முதல்வர் பழனிச்சாமி திமுக மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைத்தார்.
தூத்துக்குடியில் அமைதியான போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்திற்கு திமுக தான் காரணம். திமுக எம்.எல்.ஏ கீதாஜீவன் நடத்திய போராட்டத்தில்தான் கலவரம் நடந்தது. கீதா ஜீவன் தலைமையில் பேரணி சென்றவர்கள் வன்முறையை தூண்டியுள்ளனர். மக்களை திமுக திசை திருப்பியுள்ளது.
திமுக மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். திமுக பிரமுகரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டதன் மூலம் மக்களுக்கு யார் மேல் கோபம் என்பது தெரிய வருகிறது. கலவரத்திற்கு திமுக உள்ளிட்ட கட்சிகளின் தூண்டுதலே காரணம். நான் விஷமிகள் என்று திமுகவைத்தான் குறிப்பிட்டேன்.
திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் சில விஷமிகளும் சேர்ந்துவிட்டனர்.திமுக ஆட்சியில் தான் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது. திமுக எப்போதும் ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவான கட்சிதான். கலவரத்தின் போது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் மக்கள் அச்சமின்றி இருக்க முடிந்தது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து நாங்கள் பேசலாமா என்று முதல்வர் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடியில் அரசு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை காட்டி முதல்வர் பேசினார்.ஆட்சியர் அலுவலகம், போலீசார் மீது தாக்குதல் நடைபெற்ற புகைப்படங்களை முதல்வர் காட்டினார். புகைப்படங்களை காட்டி இவர்களைத்தான் மக்களா? என்று கேள்வி எழுப்பினார்.