கருணாநிதி பிறந்த நாளில் திரளும் தலைவர்கள்- விஸ்வரூபமெடுக்கும் திமுக-திரும்பும் தேசிய முன்னணி காலம்!
தேசிய முன்னணி காலத்தைப் போல திமுக, கருணாநிதி பிறந்த நாளை முன்வைத்து எதிர்க்கட்சிக தலைவர்களை ஒருங்கிணைத்துள்ளது.
சென்னை: தேசிய அரசியலில் திமுக மீண்டும் விஸ்வரூபமெடுக்க தொடங்கியிருப்பது தமிழக அரசியல் கட்சிகளையும் பாஜகவையும் மிரள வைத்துள்ளது. 1980களின் இறுதியில் உதயமான தேசிய முன்னணி காலத்தை நினைவுபடுத்தும் வகையில் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறது திமுக.
1989-ல் ஜனதா தளத்துடன் திமுக, தெலுங்குதேசம், அசாம் கனபரிஷத் என பல கட்சிகளும் இணைந்து தேசிய முன்னணியை உருவாக்கி ஆட்சியை அமைத்தது. அந்த தேசிய முன்னணியின் உருவாக்கத்தில் திமுகவின் பங்கு முக்கியமானது.
மத்தியில் 2 ஆண்டுகாலம் மட்டுமே ஆட்சியில் இருந்தது தேசிய முன்னணி. அதன்பின்னர் பாஜக தலையெடுக்கத் தொடங்கியது. அதேநேரத்தில் காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் இணையாமல் பிரிந்தே நின்றனர்.
யார் யார்?
திமுகவோ பாஜகவுடன் கூட்டணி வைத்தது. பின்னர் காங்கிரஸைத்தான் கெட்டியாக பிடித்து வருகிறது. இந்த நிலையில் சோனியா காந்தி மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்களான சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக், லாலு பிரசாத் யாதவ், பரூக் அப்துல்லா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் என பெரும் தலைவர்களை ஒரே மேடையில் இணைக்கிறது திமுக.
வைரவிழா
திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா மற்றும் 94-வது பிறந்த நாளில் இந்த மாபெரும் தலைவர்கள் அனைவரும் சங்கமிக்கின்றனர். தேசிய முன்னணி காலத்தில் விபிசிங், கருணாநிதி, என்டிராமராவ் என அனைவரும் கைகோர்த்து மேடைகளில் நின்ற காட்சிகளையே இது நினைவுபடுத்துகிறது.
பாஜகவின் ஆட்டம்
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, தமது சித்தாந்தங்களை மக்கள் மீது கண்மூடித்தனமாக வலிய திணித்துக் கொண்டிருக்கிறது. இதை எதிர்க்க திராணியற்ற கட்சிகளாக திமுக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இருந்து வந்தன.
திடீர் விஸ்வரூபம்
இப்போது திடீரென காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை திமுக ஒருங்கிணைத்து விஸ்வரூபத்தைக் காட்டி இருக்கிறது. அதுவும் ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் திமுக இப்படி அனைத்து எதிர்க்கட்சிகளையும் அணிதிரட்டியிருப்பது பாஜகவையும் தமிழக அரசியல் கட்சிகளையும் மிரள வைத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.