மாமனாரை அரியணை ஏற்ற நினைக்கும் மருமகன் முயற்சிக்கு முட்டுக்கட்டை
சென்னை : தமிழகத்தின் அடுத்த பட்ஜெட் மாமா தலைமையில் திமுக தான் போடப்போகிறது என சொல்லிவருகிறார் திமுகவின் வாரிசு தலைவரின் மருமகன். மாமனாரை அரியணையில் ஏற்ற நினைக்கும் மருமகனின் முயற்சிக்கு இப்போது பெரிய முட்டுக்கட்டை விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ.க்களை இழுத்து திமுக தலைமையில் ஆட்சி அல்லது பாஜக ஆதரவுடன் திமுக ஆட்சி என்கிற திட்டத்தில் தான் டெல்லியில் சில முக்கிய தலைவர்களை சந்தித்து செயல்திட்டத்தை வகுத்தார் மருமகன்.
மாமாவின் சம்மதத்துடன் தான் இது நடந்தது. மிக தாமதமாக அறிந்த கட்சியின் தலைவர், அதிமுகவை உடைக்காமல் ஆட்சி அமைக்க முடியும்னா அது எனக்கு சம்மதம். அதிமுகவை உடைத்து ஆட்சி அமைப்பதில் உடன்பாடு கிடையாது என பிரேக் போட்டார். இதனால் மருமகனின் வேகம் தடைப்பட்டது.
அமைதியாக இருந்த மருமகன், தற்போது மீண்டும் பழைய டெல்லி தொடர்புகளோடு பேச்சுவார்த்தையை துவக்கியிருக்கிறார். ஆனால், இந்த முறை டெல்லிவாலாக்கள், காத்திருங்கள். கறுப்பு பண ஒழிப்பில் பிரதமரின் அதிரடி விவகாரம் சூடு பிடித்திருக்கிறது.
இந்த சூழலில் அவரது கவனத்துக்கு தமிழக அரசியலை கொண்டு செல்ல முடியாது. இப்போதைக்கு அந்த திட்டத்தை விவாதிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். அதனால், மருமகன் அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க முடியாமல் தடுமாறுகிறாராம்.
மகாபாரதத்தில் மருமகனை அரியணை ஏற்ற ஏகப்பட்ட திட்டங்களை போடுவார் மாமா. தமிழகத்திலோ மாமனாரை அரியணை ஏற்ற ஏகப்பட்ட திட்டங்களை போட்டு வருகிறார் மருமகன். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்கின்றனர்.