காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் பட்ஜெட் தாக்கல் செய்வதா? வெளிநடப்புக்கு பின் மு.க.ஸ்டாலின் கேள்வி
Recommended Video
சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக ஏன் வெளிநடப்பு செய்தது, திமுக உறுப்பினர்கள் ஏன் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்தனர் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய துவங்கியதும் ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, சட்டசபையில், சிறப்பு தீர்மானம் கொண்டுவந்து மத்திய அரசை வலியுறுத்த கேட்டுக்கொண்டேன். ஆனால், பொறுத்திருந்து 8ம் தேதி சட்டசபை கூட்டத்தை முடிவு செய்யலாம் என்று அரசு தரப்பில் என்னிடம் தெரிவித்தனர்.
பின்னர், தென் மாநில தலைமைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் நடைபெற உள்ளது. அது முடிந்த பிறகு, சட்டசபையை கூட்டலாம் என ஓ.பன்னீர்செல்வம் என்னிடம் கூறினார். அப்போதே, இது காலம் தாழ்த்த நடத்தப்படும் நாடகம் என்று நான் சொன்னேன். ஆனால் இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு அவையை கூட்டலாம் என ஓபிஎஸ் சொன்னார்.
மத்திய அரசு கூட்டிய கூட்டம் என்பதால் நானும் ஒப்புக்கொண்டேன். ஆனால் கூட்டத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, அந்த கூட்டத்தில் மத்திய அரசு நிலைப்பாட்டை எடுத்தது. இந்த நிலையில்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, நடவடிக்கை எடுக்காமல், பட்ஜெட் தாக்கல் செய்யும் தமிழக அரசை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது. கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளோம். ராஜ்யசபாவிலும் திமுக உறுப்பினர்கள் இன்று கருப்பு சட்டை அணிந்தே கூட்டத்தொடரில் பங்கேற்பார்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.