திருமங்கலம் பார்முலா அறிமுகம் செய்த திமுகவா தேர்தல் நேர்மை பற்றி பேசுகிறது? பாலபாரதி வியப்பு!
சென்னை: அராஜகத்தை நிறுத்தி, ஜனநாயக முறையில் நேர்மையான தேர்தல் நடக்க வேண்டும் என்று திமுக கூறுவது தான் நகைச்சுவை என்றும், ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாசாரத்தை அறிமுகம் செய்து, 'திருமங்கலம் பார்முலா' என்ற பால பாடத்தை, தமிழக தேர்தல் அரசியலுக்கு அறிமுகம் செய்தவர்கள், திமுகவினர்தான் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் எம்.எல்.ஏவான பாலபாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றில் பாலபாரதி கூறியிருப்பதாவது: திருமங்கலத்தில், வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து அளித்து, பரிமாறப்பட்ட இலையின் கீழ், ஓட்டுக்கான பணத்தை வைத்து, வாக்காளர்களை கறைபடியச் செய்தனர் திமுகவினர்.
ஆட்சியில் இருக்கும்போது, அரசு இயந்திரத்தை எப்படி எல்லாம், தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை, எப்படி எல்லாம் தங்கள் வசதிக்கு ஏற்ப ஏவினர் என்பதை, நாடு அறியும்.
அழகிரி போட்டி
2009ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி, மதுரையில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, மார்க்சிஸ்ட் சார்பில், மோகன் போட்டியிட்டார். ஓட்டுப்பதிவுக்கு, ஒரு சில நாட்களே இருந்த நிலையில், சிறையிலிருந்த சமூக விரோதிகளை, திமுக அரசின் உத்தரவோடு, நள்ளிரவில் வெளியே விட்டனர்.
பட்டாகத்திகள்
சினிமாவில் வில்லன்களை போன்ற தோற்றத்தை கொண்ட, நீண்ட முடி, தாடி, முரட்டு மீசை கொண்ட, சமூக விரோதிகளை லாரிகளில் கொண்டு வந்து, மதுரைக்குள் இறக்கினர். பட்டாக்கத்தி என்ற நீண்ட கத்திகளை கையில் ஏந்தியபடி, வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு, திமுகவினர் பணம் கொடுத்தனர்.
கொலை வெறி
இதை தட்டிக் கேட்க சென்ற, கம்யூனிஸ்ட் தோழர்களை, கொலை செய்யும் அளவுக்குத் துணிந்தனர். பணம் பட்டுவாடா நடந்த இரவு நேரத்தில், தோழர்களின் உயிரை இந்த பாதகர்களிடம் பலி கொடுத்து விடக்கூடாது என்பதால், விடிந்தவுடன் மறியல் போராட்டத்தில், நாங்கள் ஈடுபட்டோம்.
அலறும் திமுக
இப்படியொரு தேர்தல் அணுகுமுறையைக் கையாண்ட திமுக இன்று, ஓட்டுக்கு அதிமுக பணம் கொடுக்கிறது. வேட்பாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தல், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி, பாதகச் செயல்களில் ஈடுபடுகிறது அலறுகிறது.
காசு கொடுத்து ஆள் திரட்டல்
திமுகவும், காங்கிரசும் சேர்ந்து, தலைமைத் தேர்தல் கமிஷனரிடம் சென்று முறையிட்டும் உள்ளன. இவர்கள் ஆட்சியில் இருந்தபோது செய்ததை எல்லாம், மறந்து விட்டனர். இப்போதும்கூட, திமுக தலைவர்கள் செய்யும் பிரசாரத்துக்கு, காசு கொடுத்து தான் ஆட்களை திரட்டுகின்றனர். வாக்காளர்களுக்கு காசு கொடுக்கும் வேலையை, திமுக இப்போதும் செய்து தான் வருகிறது. எனவே, இவர்கள் நியாயமான தேர்தலை நடத்தத் துடிக்கின்றனர் என, சொல்ல முடியாது.
பலவீனமான திமுக
இந்தத் தேர்தலில், திமுக பலவீனமாக உள்ளது. இந்நிலையில், அதிமுக பணம் கொடுத்தால், தன் பலவீனம் இன்னும் மோசமடைந்து, தோல்வியைத் தழுவுவது உறுதியாகி விடுமோ என, திமுக அஞ்சுகிறது. அதனால் வாக்காளர்களுக்கு, அதிமுக பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என, அலறுகிறது.
குற்றச்சாட்டு
இந்த வெளிப்பாடு தான் கரூர், சென்னை போன்ற இடங்களில், தேர்தல் கமிஷன் பறிமுதல் செய்த பணத்தை அடிப்படையாக வைத்து, அதிமுக பணத்தால் வெற்றி பெற முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறது. காங்கிரசும் திமுகவும் மத்திய அரசை, 10 ஆண்டுகள் நடத்தியவர்கள்.
தேர்தல் சீர்திருத்தம்
தற்போது தேர்தல் முறையில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி, தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என, எத்தனையோ முறை, நாடாளுமன்றத்தில், பல்வேறு கட்சிகள் விவாதம் நடத்தின. தேர்தல் ஜனநாயகத்தின் மீது உண்மையில், அக்கறை இருந்திருந்தால், இவ்விரு கட்சிகளும் சேர்ந்து, தேர்தல் சீர்திருத்தங்களை, இவர்கள் ஆட்சியில் இருந்த, 10 ஆண்டுகளில் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், அப்படி எந்த காரியங்களையும் இவர்கள் செய்யவில்லை. இவ்வாறு பாலபாரதி கூறியுள்ளார்.