அண்ணா நூலக இடம் மாற்றத்தை ரத்து செய்து ஹைகோர்ட் தீர்ப்பு- இனிப்பு வழங்கி கொண்டாடுங்கள்: தி.மு.க.
சென்னை: தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றும் அரசு ஆணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. சட்டத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மக்களுக்காக நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களில் ஒன்றான, சர்வதேச தரத்திற்கு இணையாக, நவீன முறையில், அறிவுலக ஆசான் பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டினையொட்டி, "பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்" என்று பெயரில், சென்னை கோட்டூர்புரத்தில் உருவாக்கி, அதனை ஒவ்வொரு அங்குலமாக கண்காணித்து உருவாக்கினார்.
மாணவர்கள் - அறிஞர் பெருமக்கள் - ஆய்வு மாணவர்கள் - பார்வையற்றோர் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில், ஆசியாவிலேயே மிக பிரம்மாண்டமான நூலகத்தை, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் - தனக்கே உரித்தான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அந்நூலகத்தை சென்னை, நுங்கம்பாக்கம், பள்ளிகல்வி துறை அலுவலக வளாகத்திற்கு இடமாற்றம் செய்திட உத்தரவிட்டார்.
மேலும், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றிடவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை மேற்கொண்டார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வில் ஓய்வுபெற்ற ஆசிரியை எஸ்.பி.மனோன்மணி சார்பில் வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அவர்கள் ஆஜராகி நடத்திய வழக்கில், இன்று (24-8-2015) சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது.
அத்தீர்ப்பில்;
தமிழக அரசு, அண்ணா நினைவு நூலகத்தினை கோட்டூர்புரத்திலிருந்து இடமாற்றம் செய்யக் கூடாது.
கடந்த காலத்தில் நூலகம் அமைக்கப்பட்டபோது, எந்த நிலையில் பராமரிக்கப்பட்டதோ அதேநிலையில் தொடர்ந்து நல்ல முறையில் பராமரித்திட வேண்டும்.
இந்நூலகத்தில் தடை செய்யப்பட்ட அடிப்படை வசதிகளை மீண்டும் உருவாக்கி, தொடர்ந்து பராமரித்திட வேண்டும்.
நூலகத்தின் செயல்பாடுகளை உயர் நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டு, நூலகத்தை ஆய்வு செய்த நீதிமன்ற ஆணையாளர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்மீது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை அறிஞர் அண்ணாஅவர்களின் பிறந்தநாளான செப்டம்பர்-15 அன்று, தமிழக அரசு அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திட வேண்டும்.
இவ்வாறு வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை தி.மு.க. சட்டத்துறை மகிழ்ச்சியோடு வரவேற்பதுடன், அதனைக் கொண்டாடிடும் வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இனிப்புகள் வழங்கி, உற்சாகத்துடன் கொண்டாடிட வேண்டுமென வழக்கறிஞர் அணியின் நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்களை, தி.மு.க. வழக்கறிஞர் அணி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு தி.மு.க. சட்டத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.