2016ஆம் ஆண்டில் தமிழகத்தில் திமுக ஆட்சி நிச்சயம்- குமரியில் ஸ்டாலின் நம்பிக்கை
குமரி: வருகின்ற 2016 ஆம் ஆண்டில் திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவினர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதால் ஆட்சியாளர்களை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் என்ற தலைப்பில் திமுக பொருளாளர் ஸ்டாலின் மக்கள் சந்திப்புப் பயணத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று தொடங்கினார் .
இதையொட்டி ஆரல்வாய்மொழியில் பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின், தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக இப்பயணத்தைத் தொடங்கி உள்ளதாகக் குறிப்பிட்டார். அதிமுக அரசு மக்கள் பணியாற்றவில்லை என்றும், இந்த ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகள் செயல்படுத்தப்படாமல் அறிவிப்பாகவே இருப்பதாகவும் கூறினார். வரும் 2016 இல் திமுக ஆட்சி மீண்டும் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.