ஸ்ரீரங்கம் தேர்தலில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-ஸ்டாலின்
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுக கண்டிப்பாக வெற்றி பெரும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தி.மு.க தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் அமைச்சர்கள், தி.மு.க மாவட்ட செயலாளர்கள் உள்பட 64 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் தேர்தல் பணி குறித்து தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின், கே.என்.நேரு ஆகியோர் தி.மு.க தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் சந்தித்த பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அராஜகத்தில் ஈடுபட்டதை அப்போதைய தேர்தல் ஆணையர் கண்டுக்கொள்ளவில்லை. இப்போது பதவி ஏற்றுள்ள புதிய தேர்தல் ஆணையர் மீது நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையின் பேரில் ஸ்ரீரங்கத்தில் வேட்பாளரை நிறுத்தி உள்ளோம்.
அ.தி.மு.க. அரசு மீது மக்கள் கோபத்துடன் உள்ளனர். எனவே இந்த தேர்தலில் இந்த அரசுக்கு மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள். தி.மு.க. வெற்றி பெறும் நம்பிக்கை உள்ளது.
அ.தி.மு.க அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு முறைகேடு புகார்கள் வந்துக்கொண்டே உள்ளன. தி.மு.க. பொதுக் குழுவிலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கவர்னரிடம் மனு கொடுக்க இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.