40 தொகுதிகளிலும் வெல்வோம்.. திமுகவின் இளைஞர் படை வெற்றி தேடித் தரும்- மு.க.ஸ்டாலின்
பழனி: வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறும். இதற்கு உறுதுணையாக இளைஞரணியினர் செயல்பட்டு வெற்றியை தேடித் தருவார்கள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பழனியில் திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
அதிமுக அரசை விமர்சித்ததாக என் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. திண்டுக்கல்லில் போடப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக கடந்த முறை கோர்ட்டுக்கு வந்தபோது நீதிபதி எனக்கு ஜனவரி 6-ந்தேதி வாய்தா கொடுத்தார்.
ஆனால் அந்த நாள் மாவட்ட செயலாளர் ஐ.பெரியசாமியின் பிறந்த நாளாக அமைந்துவிட்டது. இதனால் அவருக்கு நான் நேரில் வாழ்த்து சொல்லும் நல்ல வாய்ப்பை கோர்ட் எனக்கு வழங்கியுள்ளது. இதற்காக நான் நீதிபதிக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
நடந்த திமுக பொதுக்குழுவில் மத்திய, மாநில அரசின் குறைகளை சுட்டிக்காட்டியும், மக்கள் நலன்களை குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதல் தீர்மானமாக மறைந்த தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. விஷம் போல் ஏறி வரும் விலைவாசி உயர்வை குறைக்க, நெல்லுக்கு கட்டுப்படியாகும் விலை வழங்க, நெசவாளர்கள், மீனவர்கள் நலன் காக்க, கிடப்பில் உள்ள நெடுஞ்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார் என அக்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் அவர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்.
அ.தி.மு.க ஆட்சியில் மின்வெட்டு அதிகரித்துள்ளது. தேர்தலின் போது அவர்கள் 2012-ம் ஆண்டுக்குள் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என கூறினர். இதுவரை அதை நிறைவேற்றவில்லை.
தி.மு.க ஆட்சியில் 7,768 மெகாவாட் மின்சாரம் உற்பத்திக்காக பல்வேறு திட்டங்கள் தீட்டியதை அ.தி.மு.க.வினர் கிடப்பில் போட்டுள்ளனர். 2002-ம் ஆண்டு புதிய தலைமை செயலகம் கட்டடத்தை தி.மு.க கட்டியது. ஆனால் அதை அவர்கள் திறக்கவில்லை. தி.மு.க.வினர் மீது ஏராளமான பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளையும் சட்டப்படி சந்திப்போம்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு காணப்படுகிறது. தி.மு.க பல்வேறு தேர்தல்களில் வெற்றியையும், தோல்வியையும் சந்தித்துள்ளது. எனினும் நாட்டு மக்களுக்காக, நாட்டு மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடும் கட்சியாக தி.மு.க உள்ளது.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறும். இதற்கு உறுதுணையாக இளைஞரணியினர் செயல்பட்டு வெற்றியை தேடித் தருவார்கள் என்றார் ஸ்டாலின்.
ஐ.பெரியசாமிக்கு நேரில் போய் வாழ்த்து
இதற்கிடையே, திண்டுக்கல் கோர்ட்டில் இன்று மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜரானார். கடந்த ஜூன் 6ஆம் தேதி திண்டுக்கல்லில் திமுக நாடாளுமன்ற நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக மு.ஸ்டாலின் மீது அதிமுக வழக்கறிஞர் அமுல்ராஜ் திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் ஸ்டாலின் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதைத்தொடர்ந்து இன்றும் ஆஜரானார். வழக்கு 17.03.2014க்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் வெளியே வந்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதா மாதிரி வாய்தா வாங்க மாட்டேன். எந்த வழக்கானாலும் சந்திக்க தயார் என்றார் ஸ்டாலின்.
முன்னதாக நேற்று இரவு திண்டுக்கலில் தங்கிய ஸ்டாலின், காலையில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் வீட்டுக்குப் போய் நேரில் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் கோர்ட்டுக்குப் போனார்.