அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கனிமொழி சரமாரி குற்றச்சாட்டு
வேலூர்: அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திமுக மகளிர் அணியின் மாநிலச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கூறியுள்ளார்.
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் ராணிப்பேட்டையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி கலந்துகொண்டார்.
கூட்டத்தில் கனிமொழி பேசியதாவது: ''தமிழகத்தில் பெண்களுக்கு எந்த நலத் திட்டத்தையும் மாநில அரசு செயல்படுத்தவில்லை. டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடினால் ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் என்கின்றனர். ஆனால், டாஸ்மாக் மதுபானக்கடையால் இளம் விதவைகள் அதிகரித்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது. பெண்கள் சுயமரியாதையுடன் வாழக்கூடிய ஆட்சி திமுக ஆட்சிதான். தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றம் பெண்களின் கைகளில்தான் இருக்கிறது. அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த கருணாநிதி கையெழுத்திடுவார் என கனிமொழி பேசினார்.