கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால் ராஜ்யசபா தேர்தல் போட்டியிலிருந்து திமுக விலகும்..?!
சென்னை: தேமுதிக, திமுக கூட்டணியில் சேருவதாக இருந்தால், அவரது கட்சிக்கு ராஜ்யசபா தேர்தலில் நாங்கள் ஆதரவு தருகிறோம். இது விஜயகாந்துக்கு திமுக தரப்பிலிருந்து லேட்டஸ்டாக போயுள்ள தகவலாம்.
தற்போது மலேசிய ஓய்வை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பியுள்ள விஜயகாந்த், நல்ல முடிவாக எடுப்பார் என்ற நம்பிக்கையில் மனித நேய மக்கள் கட்சியினர் உள்ளனராம்.
இதற்கிடையே, மலேசியாவில் இருந்த விஜய்காந்துடன் மனித நேய மக்கள் கட்சியினர் நடத்திய சந்திப்பு குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனியாக ஒரு டூர்
விஜயகாந்த் சமீபத்தில் திடீரென மலேசியா கிளம்பிப் போனார். இது தனிப்பட்ட பயணம் என்றும், விஜயகாந்த் மட்டும்தான் போயிருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கம்ப்ளீட்டாக ஒரு ஓய்வு
இந்த டூரின்போது மலேசியாவில் உள்ள தனக்கு நெருக்கமான ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் நண்பரின் பண்ணை வீட்டில்தான் விஜயகாந்த் தங்கியிருந்தார். அந்த வீட்டில் சந்தோஷமாக பொழுதைக் கழித்தாராம் விஜயகாந்த். நண்பரின் பிள்ளைகளுடன் விளையாட்டு, நல்ல ஓய்வு என்று பரிபூரணமாக ரிலாக்ஸ் செய்து கொண்டா்ராம் கேப்டன்.
சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியினர்
ஆனால் விஜயகாந்த் வந்த தகவல் அறிந்து மலேசியாவில் ஏற்கனவே சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அவரை சந்திக்க நேரம் கேட்டு அணுகியுள்ளனர். விஜயகாந்த்தும், சரி என்று சம்மதித்தார். இதையடுத்து கோலாலம்பூரில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் சந்திப்பு நடந்தது.
நல்லா பொழுது போகுது...
மமக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, இணைச் செயலாளர் ஹாரூண் ரசீத், அமைப்புச் செயலாளர் மவ்லா நாசர், மலேசிய மண்டலத் தலைவர் ஆனந்தூர் சேட் ஆகியோர் விஜயகாந்த்திடம் பேசினார்கள். அவர்களிடம் நன்றாக பொழுது போகிறது. நண்பரின் பிள்ளைகளுடன் ஜாலியாக இருக்கிறேன், படம் பார்க்கிறேன் என்று ரிலாக்ஸ்டாக பேசினாராம் விஜயகாந்த். அவரிடம், மனிதநேய மக்கள் கட்சியினர் பாஜக குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர்.
பாஜகவுக்குப் போகலாமா...
மமக தலைவர்கள் விஜயகாந்த்திடம், முஸ்லிம்கள் மீது நீங்கள் அதிக அக்கறை காட்டுகிறீர்கள். தேர்தலில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளித்திருக்கிறீர்கள். புதுக்கோட்டை இடைத்தேர்தல் வரை இது தொடர்கிறது. பக்ரீத்துக்கு குர்பானி கொடுக்கிறீர்கள். இப்படி முஸ்லிம்கள் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கும் நீங்கள், பாஜக தலைமையிலான மதவாத அணிக்குச் செல்லப்போவதாகச் செய்திகள் வருகின்றன. வகுப்புவாதச் சக்திகள் தமிழகத்தில் வளர்வதற்கு தேமுதிக துணைபோய்விடக் கூடாது. எப்போதும் போல சிறுபான்மையினரின் நண்பராக நீங்கள் திகழ வேண்டும் என்று கோரினராம்.
நான் சேருவதாக சொல்லவில்லையே
அதற்கு விஜயகாந்த், நான் பாஜக கூட்டணியில் சேரப் போவதாக சொல்லவே இல்லையே என்று கேட்டாராம். அதற்கு மமக தலைவர்கள், பாஜக தலைவர்கள் உங்களைச் சந்தித்துப் பேசினார்களே என்று கேட்டபோது, புத்தாண்டுக்கு வாழ்த்துச் சொல்ல வந்தனர். கூட்டணியில் சேர அழைத்தனர். அவர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டேன், உறுதி எதையும் தரவில்லையே என்று விளக்கினாராம் விஜயகாந்த்.
ஜெயலலிதாவே பயப்படுகிறார்
பின்னர் தமிமுன் அன்சாரி பாஜக குறித்து விஜயகாந்த்திடம் விளக்கியுள்ளார். அவர் பேசும்போது,பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என்று பயந்துதான் முதல்வர் ஜெயலலிதாவே பாஜகவுடன் சேர தயங்குகிறார் என்று தமிமுன் அன்சாரி மேலும் விளக்க விஜயகாந்த் மிகவும் கவனத்துடன் அதைக் கவனித்தாராம்.
தேமுதிகவுக்கு லாபமே இல்லை
மேலும் அவர், மதச் சார்பற்ற தன்மையில் நீங்கள் உறுதியாக இருங்கள். தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள நாற்பது தொகுதிகளிலும் முஸ்லீம், கிறிஸ்தவர்கள் ஓட்டுகள் 15 சதவீதம் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் என வந்தால், பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எதிராக இந்த ஓட்டுகள் ஒன்றிணையும். மத நல்லிணக்கமும் மதசார்பற்ற தன்மை யும் தமிழகத்தில் உயிருடன் இருக்க திமுக கூட்டணியில் இணைய வேண்டும். எந்த சூழலிலும், பாஜக ஆதரவு நிலை எடுத்து தமிழகத்தில் மதவாத சக்தி தலைத்தூக்க உங்களின் வலிமை உதவிடக் கூடாது. பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் தேமுதிகவுக்கு லாபம் இல்லை. பாஜகவுக்குத்தான் லாபம். அதனால், பாஜக வலிமை அடைய தேமுதிக வின் பலம் பயன்பட்டு விடக் கூடாதுங்கிறது தான் எங்களின் கவலை என்றாராம்.
சரி பொறுத்திருங்கள்
எல்லாவற்றையும் உன்னிப்பாக கேட்ட விஜயகாந்த்த் முடிவாக, நாமெல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன். இந்தியாவில் எல்லா சமூகத்தினரும் அண்ணன் தம்பியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பிரிக்க அனுமதிக்கக்கூடாது. விழுப்புரம் மாநாடு நடக்கப் போகிறது. மாநாட்டில் தொண்டர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அறிவிக்கிறேன். அது வரை கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று சொன்னாராம்.
நீங்க வந்தால் சிவா விலகுவார்
பின்னர் ராஜ்யசபா தேர்தல் குறித்து தமிமுன் அன்சாரி பேசுகையில், திமுக வேட்பாளராக சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் நீங்கள் கூட்டணிக்கு வந்தால், சிவாவை விலகச் சொல்வதாக திமுக தலைவர் கருணாநிதி எங்களிடம் தெரிவித்துள்ளார். பரிசீலியுங்கள் என்றும் கூட்டணிக்கு வருமாறு மேலும் வலியுறுத்தினராம்.
நல்ல செய்தியா சொல்லுங்க
இப்படியெல்லாம் சொல்லி முடித்த மனித நேய மக்கள் கட்சியினர் கிளம்பும்போது, அண்ணன் தம்பி உறவோடுதான் வந்தோம், அரசியலுக்காக வரவில்லை. நல்ல செய்தியாக சொல்லுங்கள் என்று கூறி கிளம்பியுள்ளனர். அவர்களிடம் விஜயகாந்த், கவலைப்படாதீங்க என்று ஆறுதலாக சொல்லி வைத்தாராம்.
அப்படியானால், குஷிப்படுத்தும் வகையிலான தகவலை விரைவில் கேப்டன் சொல்வாரா என்ற எதிர்பார்ப்பில் சம்பந்தப்பட்டவர்கள் உள்ளனராம்.