கனிமொழி, ராசாவுக்காக சென்னை விமான நிலையத்தில் குட்டி மேடை!
2ஜி ஊழல் வழக்கில் இருந்து சிபிஐ நீதிமன்றம் விடுவித்ததை தொடர்ந்து சென்னை வந்த கனிமொழி மற்றும் ஆ ராசாவுக்கு விமான நிலையத்தில் குட்டி மேடை அமைத்து அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை 2ஜி ஊழல் வழக்கில் இருந்து சிபிஐ நீதிமன்றம் விடுவித்ததை தொடர்ந்து சென்னை வந்த கனிமொழி மற்றும் ஆ ராசாவுக்கு விமான நிலையத்தில் குட்டி மேடை அமைத்து அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 7 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது சிபிஐ குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் தீர்ப்புக்குப் பிறகு இன்று சென்னை வந்த கனிமொழி மற்றும் ஆ ராசாவுக்கு பறையாட்டம், தப்பாட்டம் என உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் கட்சியினரும் தொண்டர்களும் வாழ்த்து தெரிவிக்க வசதியாக விமான நிலையத்தில் ஒரு குட்டி மேடை அமைக்கப்பட்டது. இந்த விழா மேடையின் பின்பகுதியில் கருணாநிதியின் போட்டோ மற்றும் அவர் எழுதிய அநீதி வீழும் அறம் வெல்லும் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
இந்த மேடைக்கு வந்த ஆ ராசா மற்றும் கனிமொழிக்கு தொண்டர்கள் பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்பு தெரிவித்தனர். இதில் திமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.