திருத்தணியில் கையில் வெள்ளி வேலுடன் தொண்டர்களுக்கு காட்சி அளித்த மு.க ஸ்டாலின்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அம்மையார்குப்பம் கிராமத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வேத விற்பனர்கள் மாலை அணிவித்து வெள்ளி வேல் வழங்கினர்
திருத்தணி: பாஜகவினர் வெற்றி வேல் யாத்திரை நடத்தி மாநிலம் முழுவதும் வலம் வந்த நிலையில் திமுக நிர்வாகிகள் திருத்தணியில் வெள்ளி வேல் ஒன்றை தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பரிசளித்துள்ளனர். வெற்றியின் அடையாளமாக முருகனின் வேலாயுதம் பார்க்கப்படுகிறது.
தமிழ் கடவுள் முருகனுடைய ஆயுதமாக வேல் உள்ளது. முருகனுடைய தாய் பார்வதி தன்னுடைய சக்தியையும் ஆற்றலையும் ஒன்றிணைத்து வேலாக முருகனுக்குக் கொடுத்தார். இந்த வேல் வெற்றியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தினர். பாஜக தலைவர் எல். முருகன் திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூர் வரை ஒரு மாத காலம் வேல் யாத்திரை நடத்தினார். அப்போது வேல் வன்முறையை தூண்டும் ஆயுதம் என்று காங்கிரஸ்
கட்சியினர் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் இன்று திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவருக்கு வேத விற்பணர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுகவினர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வேலை பரிசாக அளித்தனர்.
பரிசாக அளிக்கப்பட்ட வெள்ளி வேலுடன் மு.க.ஸ்டாலின் போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். அப்போது தொண்டர்கள் கையில் வேலுடன் காட்சி அளித்த ஸ்டாலினை பார்த்து கை தட்டி ஆராவாரம் செய்தனர். பரிசாக கிடைத்த வெள்ளி வேலுடன் சென்னைக்கு புறப்பட்டார் மு.க ஸ்டாலின்.
இந்துக்களுக்கு திமுகவும் திமுகவினரும் எதிரி அல்ல என்பதை பறைசாற்றும் வகையில் ஸ்டாலினின் சமீபத்திய செயல்பாடுகள் அமைந்துள்ளன.