கொலையுண்ட எண்ணூர் ரித்திகாவின் குடும்பத்தினருக்கு ஸ்டாலின் ஆறுதல்
சென்னை எண்ணூரில் கொலை செய்யப்பட்ட குழந்தை ரித்திகாவின் குடும்பத்தினரை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
சென்னை: திருவொற்றியூர்- மணலி சாலையில் குப்பைக் கிடங்கில் சடலமாக மீட்கப்பட்ட 3 வயது சிறுமி ரித்திகாவின் குடும்பத்தினரை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் பழனியின் மகள் ரித்திகாவை (3) கடந்த சனிக்கிழமை முதல் காணவில்லை. இந்நிலையில் சிறுமி குப்பைக் கிடங்கில் சடலமாக கிடந்தாள்.
எண்ணூர் போலீஸார் விசாரணையில், குழந்தையிடம் இருந்த நகைக்காக அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரேவதி என்பவர் கடத்திக்கொ லை செய்தது அம்பலமானது.
இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை ரித்திகாவின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. தற்போதைய அதிமுக அரசு செயல்படாத அரசாக உள்ளது என்றார் ஸ்டாலின்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட போரூர் சிறுமி ஹாசினியின் குடும்பத்தினரையும் அண்மையில் ஸ்டாலின் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழிசை அஞ்சலி
அதேபோல இறந்த ரித்திகாவின் உடலுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது கனத்த இதயத்துடன் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதாக கூறினார்.