எம்ஜிஆர் நூற்றாண்டுவிழா அலங்கார வளைவால் உயிரிழந்த ரகுவின் குடும்பத்தை சந்தித்து ஸ்டாலின் ஆறுதல்!
கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவால் உயிரிழந்த ரகுவின் குடும்பத்தை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார்.
Recommended Video
கோவை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவால் உயிரிழந்த ரகுவின் குடும்பத்தை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கோவையில் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை அவினாசி சாலையில் கடந்த வாரம் முதலே அதற்கான பேனர்கள் வைப்பது அலங்கார வளைவு அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் தொடங்கின.
கடந்த 24ஆம் தேதியான வெள்ளிக்கிழமை கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த ரகு அவ்வழியாக பைக்கில் சென்றார். அப்போது அலங்கார வளைவில் இருந்து நீட்டிக்கொண்டிருந்த மூங்கில் மீது மோதிய ரகு நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த லாரி ரகுவின் மீது ஏறியது. இதில் ரகு தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வரும் அவர் திருமணத்திற்கு பெண் பார்க்க சொந்த ஊருக்கு வந்த போது இந்த சோக சம்பவம் அரங்கேறியது.
இந்த கோர சம்பவத்துக்கு அதிமுக வைத்த பேனர்களே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த ரகுவின் குடும்பத்தினரை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.