என்னை கைது செய்ததால் போராடாதீர்கள்… போய் சீமை கருவேல மரங்களை வெட்டுங்கள் - வைகோ ஆர்டர்
தேச துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைது செய்யப்பட்டார். தனது கைதிற்காக யாரும் போராட வேண்டாம் என்று மதிமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: தேச துரோக வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான வைகோவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாகக் கூறி வைகோ மீது தேசதுரோக வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் வைகோவின் பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.
நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த இந்த வழக்கில் நேரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திடீரென நேரில் ஆஜரானார். விசாரணையின் முடிவில் அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெனிவாவில் சதி
கைது செய்யப்படுவதற்கு முன்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது: இப்போது ஈழத்தில் நடப்பதை மூடி மறைக்க ஜெனிவாவில் சதி நடக்கிறது. ஒரு சில தமிழர்களை சம்பந்தம் போன்றவர்களை கையில் வைத்துக் கொண்டு குற்றம்சாட்டுகின்ற அளவிற்கு நிலைமை படுமோசமாக ஆகிவிட்டது. இதனை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உலகத்திற்கு தெரிய வேண்டும்.
போராட வேண்டாம்
உண்மைகள் வெளியே வரவேண்டும் என்பதற்காகத்தான் நான் ஜாமீன் போடவில்லை. ஆனால் அதே நேரத்தில் நான் மதிமுகவின் மாவட்ட செயலாளர்களுக்கு, நிர்வாகிகளுக்கு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறு ஆர்ப்பாட்டம் கூட என்னை கைது செய்யப்பட்டதற்காக நடத்தக் கூடாது.
வழக்கமான அரசியல்
எந்த இடத்திலும், பொதுமக்களுக்கோ, போக்குவரத்திற்கோ எந்த இடையூறும் செய்யக் கூடாது. நான் கைதான பின் நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்வது என்பது வழக்கமாக அரசியல் கட்சிகள் செய்கிற வேலை என்ற குற்றச்சாட்டுகளுக்கு மதிமுகவினர் ஆளாகக் கூடாது.
சீமை கருவேலம் மரத்தை அகற்ற..
அதற்கு பதிலாக சீமை கருவேல மரங்களை அகற்றும் வேலைகளை மதிமுகவினர் செய்ய வேண்டும். அதே போன்று சிறையில் இருக்கும் என்னை பார்வையாளராக யாரும் வந்து பார்க்க வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று வைகோ கூறினார்.