மோடியை இனி நம்பக் கூடாது… போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள்: பி.ஆர். பாண்டியன்
சென்னை: காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனையில் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து சேப்பாக்கத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பி.ஆர். பாண்டியன் இனி மோடியை நம்பக் கூடாது; போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்த்ததையடுத்து தமிழகத்தில் போராட்டம் வெடித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்து அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய சங்கங்கள் தமிழகத்தில் போராட்டத்தில் குதித்துள்ளன.
இந்நிலையில், இன்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
தொடங்கியது காலவரையற்ற உண்ணாவிரதம்
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச செயலாளர் மோகன் தொடங்கி வைத்த இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி. ஆர் பாண்டியன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
சம்பா சாகுபடிக்கு இல்லாத காவிரி
இந்தப் போராட்டத்தின் போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, சம்பா சாகுபடிக்கு உரிய தண்ணீரை பெற்றுத் தருவது, கர்நாடகா கலவரத்தால் தடை செய்யப்பட்டுள்ள லாரி போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது, கலவர கும்பலால் தாக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை பெற்றுத் தருவது, அபகரிக்கப்பட்ட தமிழர்களின் சொத்துகளை திரும்ப அவர்களிடமே ஒப்படைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
கர்நாடக கலவரக்காரர்களுக்கு கண்டனம்
மேலும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவமதித்தும், தொடர் கலவரத்தில் ஈடுபடும் கர்நாடக அரசு மற்றும் அரசியல் கட்சியினரை கண்டித்தும் இந்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
நாடாளுமன்றத்திற்கு கரும்புள்ளி
போராட்டத்தின் போது பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மோடி உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்து நாடாளுமன்றத்துக்கு கரும்புள்ளி ஏற்படுத்திவிட்டார். சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் அதை செயல்படுத்த மத்திய அரசு மறுக்கிறது. தீர்ப்பை செயல்படுத்தாதது நீதிபதிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. மத்திய அரசால் உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. இதனால் தான் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.
பொன். ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும்
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் ராஜினாமா செய்வதன் மூலம் தமிழகத்தின் தனித்துவத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பொறுப்புகளுக்காகவும், பதவிகளுக்காகவும் அலைபவர்கள் தமிழர்கள் அல்ல என்பதை பொன்.ராதாகிருஷ்ணன் வெளிப்படுத்த வேண்டும். தமிழக எம்.பிக்களை சந்திக்க மறுத்த மோடியை இனி நம்ப கூடாது. அவருக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்.
தமிழக எம்பிக்களுக்கு இனி மரியாதை இல்லை
தமிழக எம்.பி.க்களையும், துணை சபாநாயரையும் மோடி சந்திக்க மறுத்தது நாடாளுமன்றத்தையே அவமதிக்கும் செயல். எனவே, தமிழக எம்.பி.க்கள் இனி நாடாளுமன்றத்துக்கு சென்றாலும், அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கப்போவதில்லை என்பதால், அவர்களும் பதவிகளை ராஜினாமா செய்து மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு ஒருதலைபட்சமாக கர்நாடக அரசுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக அவர்கள் செய்வதால், இனி அவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்று பி.ஆர். பாண்டியன் கூறினார்.