நெருங்கும் தீபாவளி: ரயிலில் பட்டாசு கொண்டு செல்ல தடை… மீறினால் 3 ஆண்டு சிறை
தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர் 2-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பட்டாசுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் ரயில், பஸ்களில் பயணிகள் பட்டாசுகள் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயிலில் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணிகளிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும், ஒலிப்பெருக்கி மூலமும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
மேலும் பயணிகளின் உடைமைகள் ஸ்கேனர் கருவிகள் மூலம் சோதனை செய்யப்படும். பார்சல் பிரிவிலும் சந்தேகத்திற்கு இடமான பார்சல்களை போலீசார் சோதனை செய்து பட்டாசுகள் இருந்தால் அவற்றை அனுமதிப்பதில்லை.
பட்டாசு சோதனைகளில் போலீஸ் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை மீறி ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பட்டாசுகளை கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், ரயில்வே சட்டத்தின் படி, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.