விதிகளை மீறும் வாகனங்களை துரத்தி சென்று பிடிக்கக்கூடாது.. சென்னை போலீஸ் கமிஷனர் கண்டிப்பு!
போக்குவரத்து விதிளை மீறும் வாகனங்களை துரத்தி சென்று பிடிக்கக்கூடாது என சென்னை போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை: போக்குவரத்து விதிளை மீறும் வாகனங்களை துரத்தி சென்று பிடிக்கக்கூடாது என சென்னை போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.
சீட்பெல்ட் அணியாத வாடகைக்கார் ஓட்டுநரை சென்னை ஓஎம்ஆர் சாலையில் போலீசார் 4 பேர் ஆபாசமாக பேசி சரமாரியாக தாக்கினர்.
இந்த அவமானத்தை தாங்க முடியாமல் 22 வயதான இளைஞர் போலீசார் முன்னிலையிலேயே தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீப காலமாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை போலீஸார் தாக்குவதும் இதனால் அப்பாவி இளைஞர்கள் உயிரிழப்பதும் அவர்களின் மண்டை உடைவதும் சர்வ சாதாரணமாகியுள்ளது.
போலீசாரின் இந்த அத்துமீறல்கள் மக்களிடையே நம்பிக்கையின்மைய ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து காவலர்கள் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தி ஆவணங்கள் தணிக்கை செய்யக்கூடாது என்று சென்னை காவல் ஆணையர் கூறியுள்ளார்.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை எக்காரணத்தை கொண்டும் துரத்தி சென்று பிடிக்கக்கூடாது என்றும் கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். விதிகளை மீறும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காவல் ஆணையர் கூறியுள்ளார்.