முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பக் கூடாது.. காவல்துறை எச்சரிக்கை
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து யாரும் வதந்தி பரப்பக் கூடாது என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் நிலை குறித்து யாரும் வதந்திகளை பரப்பக் கூடாது என்று காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் தொற்று நோய்க்கான சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் ஒரு பதற்ற நிலை உருவாகியுள்ளது. மேலும், கடைகள், பெட்ரோல் பங்க்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட்டு விடாமல் தடுக்க தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு போலீசார் அனைவரும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும், யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என்றும் போலீசாருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் பதற்றம் நிலவுவதை சாதகமாக்கிக் கொண்டு, முதல்வரின் உடல் நலம் குறித்து வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் சமூக விரோதிகள் யாராவது வதந்திகளை பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து நகரங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.