என்னை புகழ வேண்டாம்.. ஜல்லிக்கட்டு நாயகன் என கூறிய எம்எல்ஏவை தடுத்த ஓபிஎஸ்!
தன்னை புகழ்ந்து பேச வேண்டாம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் எம்எல்ஏக்களை கேட்டுக்கொண்டார்.
சென்னை: தன்னை புகழ்ந்து பேச வேண்டாம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் எம்எல்ஏக்களை கேட்டுக்கொண்டார்.
தமிழக சட்டசபை இன்று காலை கூடியதும், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் 12 பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஒக்கி புயலில் சிக்கி உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு எம்.எல்.ஏ.,க்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து பேசிய கலசபாக்கம் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, 'ஜல்லிகட்டு நாயகன்' என்று புகழ்ந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
கேள்வி நேரத்தில் தலைவர்களை பாராட்டக்கூடாது என எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை அமைதிப்படுத்தும் முயற்சியில் சபாநாயகர் ஈடுபட்டார்.
அப்போது குறுக்கிட்ட துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் என்னை புகழ்ந்து பேச வேண்டாம் என அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அனைத்து புகழும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கே உரித்தானது என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.