பிதற்றலான சுவரொட்டிகள் எதுவும் ஒட்ட வேண்டாம்.. ரசிகர்களுக்கு கமல் கட்டளை!
பிதற்றலான சுவரொட்டிகள் எதுவும் ஒட்ட வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பிதற்றலான சுவரொட்டிகள் எதுவும் ஒட்ட வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் அவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இரண்டாவது நாளாக நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இலக்கு மாறியுள்ளது
இதைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது ரசிகர்களை சந்திப்பது வழக்கமானது என்றாலும் தற்போது இலக்கு மாறியுள்ளது என்றார்.
பங்கேற்க வேண்டும்
பிப்ரவரி 21ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். அதில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் மற்ற மாவட்ட ரசிகர்களும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கஜானாவை நோக்கி அல்ல
கஜானாவை நோக்கி நாம் செல்லவில்லை என்ற அவர், மக்களின் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்றார். நமது பயணம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
பிதற்றலாக சுவரொட்டிகள்
மேலும் ரசிகர்கள் பிதற்றலாக சுவரொட்டிகள் ஒட்ட வேண்டாம் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
வெறித்தனமாக கோஷங்கள்
மூத்த ரசிகர்கள் பெருந்தன்மையுடனும் கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கமல் வேண்டுகோள்விடுத்தார். கோஷங்கள் வெறித்தனமாக இருப்பதிலும் பிதற்றலாக போஸ்டர்கள் ஒட்டுவதிலும் அர்த்தமில்லை என்றும் நடிகர் கமல் தெரிவித்தார்.
கட்சியை கேட்பேன்
இப்போது நீங்கள் என்ன செய்தாலும் கவனிப்பார்கள் என்று ரசிகர்களை பார்த்து கூறிய கமல், கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதுவரை எந்தக் கட்சி என்று ரசிகர்களை கேட்டதில்லை என்ற அவர் இனி எந்தக் கட்சி என்று கேட்டு உறுதி செய்துக்கொள்வேன் என்றார்.
நானும் திருத்திக்கொள்வேன்
மேலும் நாம் யாரையும் சாட வேண்டாம் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். நானும் திருத்திக்கொள்வேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் தெரிவித்தார்.