"என்ன சந்தை பொரி" வாங்கியாச்சா? ஊசலாட்டம் காணாத உயிர்ப்புமிக்க பாரம்பரிய சந்தைகள்!!
திண்டுக்கல்: பெரு நகர வணிகவளாகங்களில் ஏசி அறைகளில் அத்தியாவசியப் பொருட்களையும் காய்கறிகளையும் வாங்குகிறவர்களில் பலருக்கு இன்னமும் தங்களது கிராமங்களில் இப்படியும் ஒரு "சந்தை முறை" உயிர்ப்போடு இருக்கிறதா? என்பது ஆச்சரியமளிக்கவும் செய்யலாம்.. அதே நேரத்தில் அய்யோ.. வார வாரம் அப்பா, அம்மாவுடன் சந்தைக்குப் போய் வேண்டியதை வாங்கிக் கொண்டு காலாற நடந்து கிராமத்துக்கு திரும்பிய காலத்தை நினைக்க நினைக்க எவ்வளவு இன்பம் என ஏங்கவும் வைக்கலாம் இந்த கிராமப்புற சந்தைகள்...
இதை எழுதுகிற நேரத்தில் வந்த செய்தி "பங்குச் சந்தைகளில் 336 புள்ளிகள் சரிவு" என்பது...
ஆனால் கிராமப்புறங்களில் வாரத்தின் ஒரு நாள் கூடுகிற சந்தைகளில் இந்த சரிவு, ஏற்றம், இறக்கம், அதிர்ச்சி, குறியீட்டு எண் எதுவும் இல்லாமல் ஒரே சீராக, நமக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையில்தான் அனைத்து பொருட்களும் எளிதில் கிடைக்கும்..
வாராந்திர சந்தை
அத்திக்கோம்பை மாட்டுச் சந்தை, அந்தியூர் குதிரை சந்தை, போச்சம்பள்ளி சந்தை போன்றவை தமிழகம் அளவில் புகழ்பெற்றதாக இருக்கின்றன... இவைகள் இல்லாமல் தமிழகம் முழுவதும் குக்கிராமங்களில் வாராந்திர சந்தை என்பது நடைமுறையில் இன்னமும் இருக்கிறது..
10,15 கிராமங்களுக்கு மையமான ஒரு ஊரில் இதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வாரத்தின் ஒருநாள் இந்த சந்தை களைகட்டும்... இந்த சந்தையை 'அமைப்பு ரீதியாக' நிர்வகிப்பது உள்ளாட்சி அமைப்புகளின் அடிநாதமான பேரூராட்சிகள்..
இதுதான் சந்தை
சாக்குப் பைகளை விரித்து கூறு கூறாக காய்கறிகள், வாழைப்பழம், பருப்பு, எண்ணெய் உள்ளடங்கிய அத்தியாவசிய மளிகை பொருட்கள், விதம் விதமான கருவாடு, மஞ்சள், அலங்கார பொருட்கள், தின்பண்டங்கள் என குவியல் குவியலாகக் கொட்டி வைத்து வரிசை கட்டி உட்கார்ந்திருப்பார்கள் வியாபாரிகள்...
சங்கமம்
நமக்கான பொருள், நமக்கான விலையில் எந்த வியாபாரியிடம் கிடைக்கிறது என்பதை நாலு நடை நடந்தாலே "மனதில் அளந்துவிடலாம்'..
அன்றாடங் காய்ச்சி முதல் டீச்சர், ஆபீசர் சார் வரையிலான சங்கமத்தை இந்த சந்தை நாளின் சாயங்காலத்தில் இப்போதும் பார்க்க முடியும்...
கறார் இல்லை
வாரந்தோறும் நம்மிடம் வந்து வாங்கிப் போகும் வாடிக்கையாளர் அல்லது பக்கத்து ஊர்க்காரர் போன்ற பரிச்சயங்களால் வியாபாரிகளும் 'கறாராக' நடந்து கொள்வதில்லை..
அத்துடன் ஒவ்வொரு ஊர் சந்தையிலும் ஒரு பிரதான தின்பண்டம் இருக்கும்...அதை வாங்கிக் கொண்டு போனால்தான் சந்தைக்குப் போன அடையாளமே... அந்த சந்தை தின்பண்டத்துக்காக வீட்டில் குழந்தைகளும் எதிர்பார்த்து காத்து கிடக்கும் என்பது இன்னொரு சுவாரசியம்..
வேடசந்தூர் சந்தைகள்
உதாரணமாக திண்டுக்கல் பகுதியில் வேடசந்தூர் சந்தை, பூத்தாம்பட்டி சந்தை, எரியோடு சந்தை, கோவிலூர் சந்தை, அய்யலூர் சந்தை போன்றவை இப்போதும் படுஜோராகத்தான் நடந்து கொண்டிருக்கிறது....
பொரி
எரியோடு சந்தையில் பிரதான தின்பண்டமே 'பொரிகடலை' தான்'... புதன்கிழமை நாளின் மாலைநேரம் எரியோடு சுற்றுப்புற கிராமவாசிகளின் கைகளில் "பொரிகடலை" இல்லாமல் போனால்தான் ஆச்சரியம்..
அதுவும் சந்தைக்கு வந்தீங்களா? என உற்றார் உறவுகளைப் பார்த்து கேட்பதை விட 'என்ன சந்தை பொரி' வாங்கியாச்சா? என கிண்டலோடு பேசும் குரல்களை ஏகத்துக்கும் கேட்கலாம்....
வாராந்திர சந்தைகளோடு பண்டிகை காலங்களான தீபாவளி சந்தை, பொங்கல் சந்தை என ஸ்பெஷல் சந்தைகளும் உண்டு....
உயிர்ப்போடு...
இந்த சந்தையை நிர்வகிக்கும் பேரூராட்சிகளில் நிர்வாக அதிகாரிகளும் கோலோச்சியிருக்கிறார்கள்.. அரசியல்வாதிகளும் கோலோச்சுகிறார்கள்...
அவர்கள் மாறிக் கொண்டே இருந்தாலும் எந்த ஒரு சஞ்சலமுமின்றி நவீனத்தின் அத்தனையையும் உள்வாங்கிக் கொண்டு மரபு மாறால் உயிர்ப்போடு வாரந்தோறும் கூடி கலைகிறது வார "சந்தை"கள்....
இன்று புதன்கிழமை எரியோடு சந்தை...