சட்டசபையில் அவ்வளவு கலவரம் நடந்தபோதும் அதிமுக எம்எல்ஏக்கள் அமைதியாக இருந்தது இதற்குத்தானா?
சென்னை: அதிமுக எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுத்துதான் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பியது என்பது டிவி சேனலின் ஸ்டிங் ஆபரேஷனில் வெளியாகியுள்ளது.
சசிகலா அணியில் இருந்த எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணன் பேரம் குறித்து கூறியுள்ளார். இந்த நேரத்தில் உங்கள் எண்ணக் குதிரையை கொஞ்சம் தட்டி விட்டீர்கள் என்றால், பிளாஷ்பேக் ஒன்று நினைவுக்கு வர வாய்ப்புள்ளது.
அதாவது கூவத்தூரிலிருந்து எம்எல்ஏக்கள் திரும்பி வர வேண்டும் என கூறி தொகுதி மக்கள் சம்மந்தப்பட்ட எம்எல்ஏக்களுக்கு செல்போனில் எஸ்எம்எஸ் அனுப்பியும், அழைப்புவிடுத்தும் கெஞ்சினர்.
கண்டுகொள்ளவில்லை
ஆனால் சில எம்எல்ஏக்கள் தொகுதி மக்களையே திட்டி போனை கட் செய்தனர். சிலர் பொதுமக்கள் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வந்ததும் வராததை போல கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
சட்டசபையில் கலாட்டா
அதேபோல நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுகவினர் ஸ்டாலின் தலைமையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்எல்ஏக்கள் சொந்த தொகுதிகளுக்கு சென்றுவிட்டு பிறகு வரட்டும். அப்புறம் வாக்கெடுப்பை நடத்தலாம் என கோரிக்கைவிடுத்தனர். சபாநாயகர் தனபால் அதை ஏற்க மறுத்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார்.
அமளி
நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவிடாமல் ஸ்டாலின் தரப்பு அமளியில் ஈடுபட்டது. அப்போது சபாநாயகரை தாக்குவதற்கு சில திமுக எம்எல்ஏக்கள் பாய்ந்தனர். அதை பார்த்தும் கைகட்டி வாய் பொத்தியபடி அதிமுக எம்எல்ஏக்கள் அமர்ந்திருந்தனர். பன்னீர்செல்வம் தரப்பு எம்எல்ஏக்கள் மட்டும் திமுக கோரிக்கையை பிரதிபலித்து கோஷங்கள் எழுப்பினர்.
அமைதி
ஜெயலலிதா இருந்தபோது, அவருக்கு எதிராக லேசாக ஒரு கருத்தை எதிர்க்கட்சிகள் தெரிவித்தாலே பொங்கி எழும் அதிமுக எம்எல்ஏக்கள், பேசாமலே அமர்ந்திருந்தது அப்போதே சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதுதான் காரணமா?
பணம் விவகாரங்கள் பின்னணியில் இருப்பதால்தான் அதிமுக எம்எல்ஏக்கள் அவ்வளவு களேபரம் நடுவேயும் சும்மா இருந்தார்களா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.