வித்யாசாகர் ராவை பார்த்து ஜெ. கை அசைக்கலையாமே.. அப்ப பொய் சொன்னாரா?
அப்பல்லோவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை பார்த்து ஜெயலலிதா கை அசைக்கவில்லை என்று டாக்டர் சிவக்குமார் தெரிவித்தார்.
சென்னை: அப்பல்லோவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை கண்ணாடி வழியாக பார்த்து ஜெயலலிதா கை அசைக்கவில்லை என்று டாக்டர் சிவக்குமார் தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சசிகலாவின் உறவினரும், ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவருமான சிவக்குமார் ஏற்கெனவே இரு முறை ஆணையம் முன்பு ஆஜராகி சாட்சி கூறியுள்ளார்.
இதனிடையே ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அமைச்சர்கள் பார்த்த விவகாரம், அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜெயலலிதாவை மருத்துவமனையில் கண்ணாடி வழியாக பார்த்தபோது கையசைத்ததாக கூறப்படும் விவகாரம் குறித்தும் ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்ய டாக்டர் சிவக்குமாருக்கு நேற்று மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
சற்று தொலைவில்
அப்போது சிவக்குமார் ஆஜராகி ஆணையம் முன்பு கூறியதாவது: ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர்கள் யாரும் அவரை பார்க்கவில்லை. ஸ்கேன் போன்ற மருத்துவ பரிசோதனைக்காக வெளியே அழைத்து கொண்டு வரும்போது அமைச்சர் நிலோபர் கபில் மட்டும் ஜெயலலிதாவை மிக அருகில் பார்த்தார். மற்ற அமைச்சர்கள் சற்று தொலைவில் இருந்து பார்த்தனர்.
அவ்வப்போது சசியுடன் சந்திப்பு
சசிகலா மட்டும் தினமும் ஜெயலலிதாவை சந்தித்தார். ஒரு சில நாட்கள் சசிகலாவை அழைத்து வரும்படி சைகை மூலம் செவிலியர்களிடம் ஜெயலலிதா கூறுவார். அதன்படி சில நாட்கள் மட்டும் இரண்டு அல்லது மூன்று முறை ஜெயலலிதாவை சசிகலா சந்தித்தார்.
பிசியோதெரபி
ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த அறையின் கண்ணாடி வழியாக அப்போதைய ஆளுநர் வித்யாசாகர்ராவ் ஜெயலலிதாவை பார்த்தார். அப்போது நான் ஆளுநர் அருகே நின்று கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில் அவர் கவனம் செலுத்தி வந்தார்.
எக்மோ கருவி
மற்றபடி ஆளுநர் வந்திருப்பதை ஜெயலலிதா கவனித்ததாகவோ, கை அசைத்ததாகவோ தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்ட பின்பு சசிகலாவை தவிர யாரும் அவரை சந்திக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு திடீர் இதய அடைப்பு ஏற்பட்டதும் எக்மோ கருவி பொருத்தப்பட்டது. இதன்பின்பு எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிவுரைப்படி எக்மோ கருவி அகற்றப்பட்டது என்றார் டாக்டர் சிவக்குமார்.