மருந்தின் “சைட் எபெக்ட்ஸ்” தெரியாத 60% டாக்டர்கள் – ஆய்வு சொல்லும் “திடுக்” தகவல்
சென்னை: கிட்டதட்ட 60 சதவீத மருத்துவர்களுக்கு மருந்தின் வீரியம் பற்றி தெரிவதில்லை என்று ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆங்கில மருந்துகள் பெரும்பாலும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
அந்த மருந்துகள் என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிந்து அதன்படி டாக்டர்கள் மருந்துகளை கொடுக்க வேண்டும்.
பல்வேறு வகை சோதனைகள்:
ஒரு மருந்தை கண்டுபிடித்து தயாரிக்கும் போதே அதை பல்வேறு கட்ட சோதனைக்கு உட்படுத்துகிறார்கள்.
பக்க விளைவுகள் லிஸ்ட்:
பின்னர் அது என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று கண்டு பிடித்து அதுபற்றி தகவல்களையும் வெளியிடுகிறார்கள். அதன் பிறகுதான் மருந்துகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
டாக்டர்களுக்கு தெரிவதில்லை:
ஆனால், மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் எது என்று தெரியாமலே பெரும்பாலான டாக்டர்கள் மருந்து எழுதி கொடுப்பது தெரிய வந்துள்ளது.
மருந்துகள் குறித்த ஆய்வு:
இது தொடர்பாக சர்வதேச மருந்து மற்றும் உயிரியல் விஞ்ஞான பத்திரிகை ஒன்று சமீபத்தில் டாக்டர்களிடம் ஆய்வு நடத்தியது.
60 சதவீதம் மருத்துவர்கள்:
சென்னையில் இந்த பத்திரிகை 125 டாக்டர்களிடம் ஆய்வு மேற்கொண்டது. அதில் 60 சதவீத டாக்டர்களுக்கு மருந்தின் பக்க விளைவுகள் பற்றி தெரியவில்லை என்று தெரிய வந்தது. அதே போல பெரும்பாலான நர்ஸ்களுக்கும் பக்க விளைவுகள் பற்றி தெரியவில்லை.
90 கண்காணிப்பு மையங்கள்:
மருந்துகளின் பக்க விளைவுகளை கண்காணிக்க உலக சுகாதார நிறுவனத்தின் கட்டுப்பாட்டின், கீழ் இந்தியாவில் 90 மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 6 மையங்கள் செயல்படுகின்றன.
அவர்களுக்கே தெரியாது:
மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் பற்றி டாக்டர்கள் இந்த மையத்தில் புகார் தெரிவிக்கலாம். ஆனால், இந்த மையத்தின் செயல்பாடுகள் பற்றிகூட 39 சதவீத டாக்டர்களுக்கு தெரியவில்லை.
மாற்று வழிமுறைகள் தேவை:
பொதுவாக மருந்துகள் பக்க விளைவுகளை உடனே வெளிக்காட்டுவதில்லை. மருந்து சாப்பிட்டு பல காலத்துக்கு பிறகுதான் வெளியே தெரிய வருகிறது. பிற்காலத்தில் என்னென விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே தெரிந்து அதை தடுக்க டாக்டர்கள் வேறு வழிமுறைகளை கையாள வேண்டும்.
உயிரே போகலாம் ஜாக்கிரதை:
சில மருந்துகள் பக்க விளைவுகள் மூலம் உயிரிழப்பையும் ஏற்படுத்துகின்றன. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 16.2 சதவீதம் பேர் மருந்துகளின் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.