நெல்லையில் டாக்டர்கள் போராட்டம்.. நோயாளிகள் அவதி
நெல்லையில் அரசு டாக்டர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்க டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: நெல்லையில் அரசு டாக்டர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்க டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவத்துறையின் செயல்பாடுகளை நெறிப்படுத்தும் இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பை, தேசிய மருத்துவ கமிஷனாக மாற்றும் வரைவு மத்திய அரசு மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவமுறையை படிக்காமல் மற்ற மருத்துவ படிப்புகளை முடித்தவர்களும் மருத்துவம் மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
எனவே இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நெல்லை அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மருத்துவ சங்க நெல்லை மாவட்ட தலைவர் ஆதம்அலி, செயலாளர் நிர்மலா விஜயகுமார் மற்றும் அரசு டாக்டர்கள் சங்க நெல்லை மாவட்ட தலைவர் முகம்மதுரபீக்,ஆகியோர் கலந்து கொண்டனர்.
செயலாளர் சித்தார்த்தன் தலைமையில் நுாற்றுக்கணக்கான டாக்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லையில் தனியார் மருத்துவமனை, கிளினிக்களிலும் புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படவில்லை. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை சிகிச்சையளிக்காமல் புறக்கணித்தனர்.