800 கிராம் எடையில் பிறந்த ரொம்ப குட்டிப் பாப்பா... காப்பாற்றி சாதனை புரிந்த மருத்துவர்கள்
மதுரை: மதுரையில் மருத்துவமனை ஒன்றில் 800 கிராம் எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மதுரை அருகே ஒத்தகடை நரசிங்கம் பகுதியை சேர்ந்தவர் தாமரைசெல்வி. இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்து இறந்து விட்டது.
இந்த நிலையில் 3வது முறையாக கர்ப்பம் தரித்த தாமரைசெல்வி மதுரை சர்வேயர் காலனியில் உள்ள தேவதாஸ் சிறப்பு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். 7 மாத கர்ப்பிணியான தாமரை செல்விக்கு தட்டம்மை, நிமோனியா போன்ற நோய்கள் இருந்தது தெரியவந்தது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் தாமரை செல்விக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவருக்கு சிறப்பு மருத்துவர் டாக்டர் தெய்வேந்திரன் தலைமையில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பத்திரமாக காப்பாற்றினர். அக்குழந்தை 800 கிராம் எடை மட்டும் இருந்தது. அக்குழந்தையை பரிசோதித்தபோது நுரையீரல் நோய் இருந்ததும், இருதயத்தில் துவாரம் இருந்ததும் தெரியவந்தது.
இந்நோய்களை டாக்டர்கள் குழந்தை பிறந்ததில் இருந்தே சுமார் 3 வார காலம் கண்ணும் கருத்துமாக சிகிச்சை அளித்து எந்த பக்கவிளைவுமின்றி குழந்தையை காப்பாற்றினர். தற்போது தாயும் குழந்தையும் பூரண குணம் அடைந்து நலமாக உள்ளதாக டாக்டர் தெய்வேந்திரன் தெரிவித்தார்.
குழந்தையின் பெற்றோர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தினர் என்பதால் சிகிச்சைக்கான செலவு தொகையான ரூபாய் 1.50 லட்சத்தை தேவதாஸ் மருத்துவமனை நடத்தும் அண்ணாமலை பத்மாவதி அறக்கட்டளை ஏற்று கொண்டதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.