நெஞ்சுவலி ஏற்பட்ட ஜெயலலிதாவை காப்பாற்ற 40 நிமிடம் போராடினோம்: அப்பல்லோ மருத்துவர் பரபர தகவல்
நெஞ்சுவலி ஏற்பட்ட ஜெயலலிதாவை காப்பாற்ற 40 நிமிடம் போராடியதாக அப்பல்லோ மருத்துவர் ரமா தெரிவித்துள்ளார்.
சென்னை நெஞ்சுவலி ஏற்பட்ட ஜெயலலிதாவை காப்பாற்ற 40 நிமிடம் போராடியதாக அப்பல்லோ மருத்துவர் ரமா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
ஆஜராகும் ஒவ்வொருவரும் பல்வேறு தகவல்களை ஆணையத்தில் வாக்குமூலமாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று அப்போலோ மருத்துவர் ரமா, செவிலியர் விஜயலட்சுமி ஆகியோர் ஆஜராகினர்.
40 நிமிடம் போராடினோம்
மருத்துவர் ரமா அளித்த வாக்குமூலத்தில் நெஞ்சுவலி ஏற்பட்ட ஜெயலலிதாவை காப்பாற்ற 40 நிமிடம் போராடியதாக தெரிவித்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனை வார்டில் டிசம்பர் 4-ம் தேதி மாலை 4.30க்கு ஜெயலலிதாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
நெஞ்சை பிளந்து அறுவை சிகிச்சை
நெஞ்சுவலி ஏற்பட்ட உடன் வார்டிலேயே ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும் ரமா கூறினார். ஜெயலலிதாவுக்கு நெஞ்சைப்பிளந்து அறுவைச் சிகிச்சை செய்தபோது மருத்துவர் ரமா உடனிருந்தார்.
கமிஷன் சம்மன்
இதனிடையே வரும் 10-ஆம் தேதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஸ்டெல்லாமேரிஸ் கிளை மேலாளர் மகாலட்சுமி அப்போலோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீ கோபால் சாந்தாராம் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை
அவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கத்துக்கு மறு விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.