நகராட்சி கமிஷனரைப் பார்த்து குரைத்த நாய்.. சரமாரியாக அடித்துக் கொடூரமாக கொன்ற ஊழியர்கள்!
மேட்டூர் நகராட்சி கமிஷனரைப் பார்த்து சரமாரியாக குரைத்த நாயை, நகராட்சி ஊழியர்கள் கொடூரமாக அடித்துக் கொன்றனர்.
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி ஆணையரைப் பார்த்து ஒரு தெரு நாய் குரைத்துள்ளது. இதனால் ஆவேசமடைந்த அந்த ஆணையர் கொடுத்த புகாரின் பேரில் நகராட்சி ஊழியர்கள் நாயை சரமாரியாக அடித்துக் கொன்ற செயல் மேட்டூரை அதிர வைத்துள்ளது.
பூலாம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் கோபால். இவர் மேட்டூரில் வசித்து வருகிறார். இவர் நாய் வளர்த்து வருகிறார். இவரது வீட்டுக்கு எதிர் வீட்டில்தான் நகராட்சி ஆணையாளர் நாராயணன் வீடு உள்ளது. நாராயணன் வெளியே வரும்போதெல்லாம் கோபால் வீட்டு நாய் அவரைப் பார்த்து தொடர்ந்து குரைக்குமாம்.
கோபால் சொல்லிக் கொடுத்துதான் இப்படி நாய் குரைப்பதாக கருதிய நாராயணன், அதுகுறித்து மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் நகராட்சி ஊழியர்களிடமும் நாயை அடித்துக் கொல்லுமாறு அவர் கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து விரைந்து வந்த நகராட்சி ஊழியர்கள் அந்த நாயை அங்கிருந்து தூக்கிச் சென்றனர். பின்னர் அதை அடித்து தெரு வழியாக தரதரவென இழுத்து வந்தனர்.
இதை அந்தத் தெருவே பார்த்து அதிர்ச்சி அடைந்தது. சிலர் அதை செல்போனில் படம் பிடித்து இன்டர்நெட்டில் வெளியிட்டனர். இதனால் விவகாரம் பெரிதானது.
நாயைக் கொடூரமாக அடித்துக் கொன்ற செயலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த செயலுக்குக் காரணமான நகராட்சி ஆணையர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.