காலில் விழும் கலாசாரமே இருக்க கூடாது.. அரசு அதிகாரிகளிடம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கறார்
புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய அரசு ஊழியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியின் போது தனது காலில் விழுந்து ஆசி பெற முயன்றவர்களை தடுத்து நிறுத்தி, யாரும் எனது காலில் விழக் கூடாது என புதுச்சேரி நாரயணசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.
புதுவை சுகாதார இயக்கத்தில் 130 புதிய ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, பள்ளி கல்வித்துறையில் 41 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை அலுவலகத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். அப்போது, ஒவ்வொருவரும் பழக்கூடை, சால்வை, இனிப்புகள் ஆகியவற்றை எடுத்து வந்திருந்தனர். முதல்வர் நாராயணசாமி பணி ஆணை வழங்கியதும், அவருக்கு சால்வை அணிவித்து பழக்கூடை, இனிப்பு ஆகியவற்றை அவர்கள் வழங்கினார்கள். சால்வையை மட்டும் ஏற்றுக் கொண்ட நாரயணசாமி மற்றவற்றை ஏற்க மறுத்துவிட்டார். மேலும், ஒரே ஒரு இனிப்பை மட்டும் எடுத்துக் கொண்டார்.
அப்போது, பணி ஆணை பெற்ற சிலர் நாராயணசாமியின் காலில் விழுந்து ஆசி பெற முயற்சித்தனர். அதை தடுத்த நாரயணசாமி யாரும் எனது காலில் விழக்கூடாது என்று கூறிவிட்டாராம். மேலும், இது போன்ற கலாச்சராங்கள் தேவையில்லை என அவர்களிடம் அறிவுரை வழங்கியுள்ளாராம்.