இனப் படுகொலை நாளில் சென்னையில் ஐ.பி.எல். போட்டி: தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு
சென்னை: இனப் படுகொலை நடைபெற்ற மே 18ம் தேதி சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெற அனுமதிக்கக் கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.
இனப்படுகொலை நடைபெற்ற மே 18ம் தேதி அன்று சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெற அனுமதிக்கக் கூடாது என சென்னையில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் அதியமான் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த 2009ம் ஆண்டு மே 18ம் தேதி அன்று மாபெரும் தமிழினப் படுகொலைக்குப் பின்பு போரை நிறுத்தியது இலங்கை அரசு. இந்த நாள் தமிழர்களின் கறுப்பு தினமாக உலகத் தமிழர்களால் கருதப்படுகிறது.
இந்த நாளை இலங்கை அரசு தமிழர்களை கொன்று வெற்றி வாகை சூடிய நாளாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடுகிறது. ஆனால் தமிழர்கள் இந்த நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக ஆண்டுதோறும் அனுசரித்து வருகிறார்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் மே 18ம் நாளில் மாபெரும் நினைவேந்தல் நிகழ்சிகளை நடத்துகின்றனர்.
தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் சுடரேந்தி தமிழின உணர்வாளர்கள் போரில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துகிறார்கள். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த நாளில் கேளிக்கை, விளையாட்டுகள், களியாட்டங்கள் முதலியவற்றை தவிர்த்து வருகின்றனர்.
தமிழகத்திலும் இந்த இனப்படுகொலை துக்க நாளை தமிழக மக்கள் நினைவு கூர்தல் அவசியமாகும். இந்த மே 18ம் நாள் தமிழர் நெஞ்சங்களில் ஆறாத ரணமாக பதிவாகி உள்ளது என்றால் அது மிகையல்ல.
இந்த நாளில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது தமிழர்களின் உணர்வை புண்படுத்துவதாக அமைந்துவிடும். கிரிக்கெட் வாரியம் தமிழர்களின் கோபத்திற்கும் ஆளாகும். அதனால் வருகிற மே 18ல் சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்த அனுமதிக்கக் கூடாது.
மேலும், இந்த போட்டியை வேறு எதாவது ஒரு நாளில் ஐ.பி.எல் நிர்வாகம் வைத்துக் கொள்ளட்டும். ஒரு வேளை ஐ.பி.எல் நிர்வாகம் இதே நாளில் கிரிக்கெட் போட்டியை நடத்தினால் தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் மாணவர்கள் இந்த கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், தமிழக அரசும் இந்த நாளில் கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்த அனுமதிக்க கூடாது என்றும் உலகத் தமிழர்கள் சார்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது என்றார்.