கழுதைப் பால் ஆரோக்கியமானதா? செங்கோட்டையில் சூடுபிடிக்கும் விற்பனை
செங்கோட்டை: செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கழுதைப் பால் வியாபாரம் படுஜோராக நடைபெறுகிறது. கழுதைகளுடன் தெருத் தெருவாகச் சென்று ‘கழுதைப் பால் வாங்கலியோ... கழுதைப் பால்...' எனக் கூவி அழைத்து, கேட்பவர்களுக்கு அங்கேயே கறந்து கொடுக்கின்றனர்.
தற்போது கிராமங்களில் கூட சலவைத்தொழிலாளிகள் கழுதைகளை வைத்திருப்பதில்லை. ஆனால் பால் விற்பனைக்காகவே கழுதைகளை வளர்க்கின்றனர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
தமிழகத்தில் தற்போது டெங்கு,பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. இந்நோய் சிறுகுழந்தைகளையும் தாக்கிவருகிறது. இந்நிலையில் தற்போது "தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழுதைப்பால் விற்ப்பனையும் சூடுப் பிடித்துள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கழுதைப் பால் குடித்தால் கல்லும் கரையும், மஞ்சள்காமாலை, பித்தம், மந்தம், மப்பு, சொரிசிரங்கு, இளைப்பு, ஆஸ்துமா,உள்ளிட்ட நோய்கள் அகன்றுவிடும் என்றும், எந்த நோயும் தீண்டாது என்றும் கழுதைகளோடு தெருவீதிகளில் வந்து கழுதைப்பால் விற்ப்பவர்கள் கூவி...கூவி விற்ப்பனை செய்வதால் ஏராளமான பொதுமக்கள் கழுதைப் பால் வாங்க திரண்டனர்.
கழுதைப்பால்
1சங்கு கழுதைப்பால் 40ரூபாய்க்கும், கழுதையின் கழுத்தில் கட்டப்பட்ட தாயத்துக்கு 40ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முகத்தை காட்ட
கழுதையின் முகத்திற்கு முன்னால் குழந்தையை காட்டுவதற்கு 15ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. கழுதை முகர்ந்து பார்த்தால் எந்த நோயோ, காத்துக்கறுப்போ அண்டாது என்பது மக்களின் நம்பிக்கை
மருத்துவகுணம்
கழுதைப்பால் நோய் எதிர்ப்பு சக்திகொண்டது, மருத்துவ குணம் நிறைந்தது என்று கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியும். எனவே, அவர்கள் வாங்குவார்கள் என்று நம்பி செங்கோட்டை தெருக்களைச் சுற்றி வருகின்றனர். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. பலர் கழுதையுடன் செல்பவர்களை நிறுத்தி, விலை விவரம் விசாரித்து விட்டு ஆர்வமுடன் வாங்கி பிள்ளைகளுக்கு கொடுத்தனர்.
அழுத பிள்ளைக்கு
அழுத பிள்ளைக்கு கழுதைப் பால் கொடு என்ற வழக்குச் சொல்லை இன்றளவும் கிராமங்களில் கேட்க முடியும். அந்தக் காலத்தில் கிராமங்களில் குழந்தைகளுக்கு உடம்புக்கு சரியில்லை என்றால் உடனே சலவைத் தொழில் செய்பவர்களிடம் இருக்கும் கழுதையிடமிருந்து ஒரு சங்கு பால் கறந்து குழந்தைக்குக் கொடுப்பார்கள். அதை நம்பியே இவர்கள் தங்களின் வியாபாரத்தை தொடங்கியுள்ளனர்.
கடலூர் மாவட்ட மக்கள்
இந்த கழுதை பால் விற்பவர்கள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் இருந்து சுமார் 25குடும்பத்தினர் ஊர் ஊராக சென்று கழுதைப்பால் விற்பனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
கழுதைகளை வளர்த்து
பால் விற்பனைக்கென குட்டி ஈன்ற கழுதைகளை தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மற்றும் திண்டுக்கல், சித்தையன்கோட்டையில் இருந்து வாங்கி வருகிறோம். தாய் கழுதை மற்றும் குட்டியுடன் சேர்த்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விலைக்கு கிடைக்கும். நாங்கள் ஒரு சங்கு பாலை ரூ.40-க்கு விற்கிறோம். ஒரு கழுதையிடமிருந்து ஒரு வேளைக்கு 150 மில்லி பால் கறக்கலாம்" என்கின்றனர் பால் விற்பனையாளர்கள்.
ஆரோக்கியமானதா?
இதுக்குறித்து செங்கோட்டை அரசு மருத்துவர் ராஜேஷ் கண்ணன் என்பவரிடம் கேட்டபோது. இது மக்கள் அறியாமையினால் செய்யப்படுவது ஆகும்.கழுதையின் பால் அனைவருக்கும் எற்றது அல்ல. ஜீரணம் ஆகாது. புட் பாய்சன் ஆகிவிடும். கிருமிகள் தொற்றுக்கள் குழந்தைகளுக்கு பரவ வாய்ப்புக்கள் அதிகம். அதனால் பொதுமக்கள் இது போன்ற முறைகளை பின்பற்றாமல் இருப்பது மிகவும் நன்று என்கிறார்.