மழைக்காக ”வாசுதேவனுக்கும், வாசுதேவகிக்கும்” திருமணம் - இது வாணியம்பாடி ஸ்பெஷல் பூஜை!
வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த செக்குமேடு காளியம்மன் வனக்கோவிலில் மழை வேண்டி சிறப்பு பூஜைகளுடன், கழுதைகளுக்குத் திருமணமும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வாணியம்பாடி, வளையாம்பட்டு, குரும்பட்டி, செக்குமேடு, கொத்தகோட்டை, பாப்பனேரி, வேப்பமரத்து சாலை, துரிஞ்சிகுப்பம், நன்னேரி, விஜிலாபுரம், வள்ளிப்பட்டு, வெள்ளைக்குட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
அந்தந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து மண் குடுவையில் வேப்பிலை கரகத்தினைப் பெண்கள் தலையில் சுமந்து வந்து வருண யாகத்தில் பூஜை செய்தனர். இதற்காக அமைக்கப்பட்ட யாகத்தில் பட்டுத் துணி, நெய், நவதானியங்கள், எண்ணெய், பழ வகைகள் கொட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதையடுத்து உலக நன்மைக்காக மாரியம்மன் கோவிலில் அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. பூஜையில் பங்கேற்ற மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் கொத்தக்கோட்டை மாரியம்மன் கோவிலில் வருண யாகமும், கழுதைகளுக்கு திருமணம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது.
வாசுதேவன், வாசுதேவகி என்னும் இரண்டு கழுதைகளுக்கு அலங்காரம் செய்து அவற்றை ஊர்வலமாக காளி கோவில் வளாகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் நடந்த வருண யாகத்தில் பக்தர்கள் கொண்டு வந்த பட்டுத்துணி, எண்ணெய், நெய், நவதானியங்கள் மற்றும் பூக்களை யாக குண்டத்தில் போட்டு யாகம் செய்தனர். அதைத் தொடர்ந்து கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.